27. தீண்டிச் செல்
இது விநோதமா, விபரீதமா என்று தெரியவில்லை. சரியா, தவறா என்று புரியவில்லை. பயனளிக்குமா, இல்லையா என்று கணிக்க இயலவில்லை. ஆனால், எது ஒன்றனைச் செய்யாதிருக்க முடியவில்லையோ அது விதிக்கப்பட்டது என்று எண்ணிக்கொண்டு தொடங்கினேன்.
சார்வாகனை விட்டு எங்குமே நகராமல் அவன் சிந்தையை ஆக்கிரமிக்க வேண்டும்; அவனை முற்றிலும் அகழ்ந்தெடுத்துவிட வேண்டுமென்று நினைத்தேன். சற்றுக் காலமெடுத்திருந்தாலும் அது முடியாத ஒன்றல்ல. எந்தப் புள்ளியில் அவன் சிந்தை குவிந்து என்னை நெருங்கியது என்பதை எப்படியாவது உணர்ந்தறிவேன். மனிதன் உள்பட இயற்கையின் அனைத்துப் படைப்புகளும் விரைப்புக் குன்றித் தளரும் தருணமென்று ஒன்று இல்லாமல் இராது. இழுத்துக் கட்டிய இரும்புச் சுருளினைப் போலவே ஒரு சிந்தை என்றென்றும் இருந்துவிடாது. அதுவும் தளரும். தண்மை எய்தும். அலைபாயும் தடங்களில் சிலவற்றையேனும் மீதம் வைக்கும். விசும்புத் துளி தேங்கிய மலரின் இதழோரம் அமரும் வண்டுகளின் விடாய் அப்போது தணியும். இதுவும் அதுவும் நடந்தேதான் தீர வேண்டும். நானறிவேன். ஆனால், அவன் பேய்களைக் கொண்டு அற்பச் செயல் புரிபவன் என்றறிந்த கணத்தில் அவனை விட்டு விலகிவிடத் தோன்றியது. சிறிய, மிகச் சிறிய தயக்கமோ, தடுமாற்றமோகூட அப்போது ஏற்படவில்லை. மிகத் தெளிவாக, திட்டவட்டமாகவே தோன்றியது. பேய்களின் சகாயத்தை நம்புபவன் என்னை அறிவது எப்படி?










Add Comment