30. கனக வித்தை
கொத்திய இடங்களைச் சமூலமிட்டுக்* கட்டியிருந்தார்கள். அவன்றலின் வாயிற்கதவைத் திறந்து உட்புறம் எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்தவனின் கண்களில் வெருட்சி இன்னமும் இருந்தது. தான் பிழைத்துவிட்டதை அவன் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துப் பூரித்துப் போனான். நினைவழியவிருந்த தருணத்தில் மகத்தான பொருளற்ற வாழ்க்கை என்று தான் வாழ்ந்த வாழ்வை வரையறுத்ததை மீண்டும் கருதி, அது பிழையென்று எண்ணினான். மகத்தானதாக இல்லாது போனாலும் பொருளற்றுப் போய்விடாது என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
கண்மூடி யோசித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று சிந்திப்பதை அப்படியே இல்லாமலாக்கிக்கொண்டு தனக்குள் வெறும் வெளியாக இருந்தான். அவனது சிந்தையில் படர்ந்த எண்ணங்களைக் வளியலையாக உதுமானி நாயனாருக்கு அனுப்பிக்கொண்டிருந்த அபுது, கிரீட சக்கரத்தின்* எழுநூற்றுத் தொண்ணூற்று ஆறாவது இதழின் நுனியில் நின்றிருந்தான். அவன், வலப்புறமாக இன்னும் பதினேழு இதழ்கள் நகர்ந்து தன்னைப் பொருத்திக்கொண்டிருக்கலாம் என்று நாயனார் நினைத்தார். சொன்னால் செய்வான். ஆனால் இப்போது வேண்டாம் என்று அவருக்குத் தோன்றியது.











Add Comment