90. கருவி
நேரமாகிவிட்டது என்று உதுமானி நாயனார் சொன்னார். ஆம், ஆனால் அதற்கு நான் காரணமல்ல. உன் குருநாதன்தான் எதையெதையோ பேசி நேரம் கடத்துகிறான். அவனுக்குச் சொல் என்று சார்வாகன் சொன்னான். அடேய், நீ தொடர்ந்து இப்படியே மரியாதைக் குறைவாகப் பேசிக்கொண்டிருந்தால் உன் சோற்றில் நஞ்சு கலந்துவிடுவேன் எச்சரிக்கை என்று அபுது பாய்ந்து முன்னால் வந்து எச்சரித்தான். கலந்துதான் பாரேன். எனக்குச் சாவு கிடையாதென்று சற்று முன்னர்தான் உன் குருநாதனின் குருநாதன் சொன்னான். அவன் சொன்னது சரியா என்று பரீட்சை செய்து பார்த்துவிடலாம் என்று சார்வாகன் நகைத்தபடி சொன்னான்.
வெளியே அவர்கள் இப்படியாக உரையாடிக்கொண்டிருந்தபோது சார்வாகனின் சிந்தைக்குள் என்னருகே அமர்ந்திருந்த கருவூர்ச் சித்தர் சட்டென்று விழி திறந்தார். அதுவரை வெறும் ஒலியாக மட்டும் அவனோடு சல்லாபம் செய்துகொண்டிருந்தவர் ஒரு முடிவுக்கு வந்தவர் போலத் தென்பட்டார். அமர்ந்திருந்த இடத்தில் அப்படியே எழுந்து நின்றவர்,
உதுமான், உன் மாணாக்கர்களிடம் அந்தப் படிக்கல்லை நகர்த்தச் சொல்,
என்று உத்தரவிட்டார்.









Add Comment