கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய அமெரிக்கா-இரான் யுத்தத்தில் நிரந்தரப் போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான ஒப்பந்தம் ஜூன் 19ஆம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகப் பொருளாதாரத்திலும், கச்சா எண்ணெய்ச் சந்தையிலும் கடந்த மூன்றரை மாதங்களாக நிலவி வந்த கடும் நெருக்கடி நிலை முடிவுக்கு வரும்.
இஸ்ரேல் ஆரம்பித்து வைத்து, பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்ட இந்தப் போரினால் இஸ்ரேல், இரான் மட்டுமல்லாது பிற மத்தியக் கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் போன்றவையும் குண்டுவீச்சுகளுக்கும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கும் இலக்காயின. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள சொத்துகள் நாசமாயின.
இந்தப் போரின் இன்னொரு முக்கியப் பின்விளைவாக, இரான் தனது கட்டுப்பாட்டிலிருக்கும் ஹோர்மூஸ் நீரிணையை முழுமையாக முடக்கியது. எரிபொருள் தேவைக்காக உலகின் பெரும்பாலான நாடுகள் மத்தியக் கிழக்குப் பகுதியையே சார்ந்துள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யில் இருபது சதவீதம் இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. எனவே இதன் தாக்கம் உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிதாக எதிரொலித்தது.















Add Comment