116. வெப்பம்
அது எனக்கொரு வினோதமான அனுபவம். அப்படியொரு தருணத்தை நான் எண்ணவுமில்லை; எதிர்பார்க்கவுமில்லை. எண்ணிப் பாருங்கள். யாரைத் தேடி என் கூட்டினின்று வெளிப்பட்டேன்? யுக யுகமாக ஆதித் தனிமத்தின் கருவிலிருந்த சொல் நான். என் இருப்பை அறிந்தவர் யாருமில்லை என்று எண்ணியிருந்தேன். எவனோ ஒருவன் என்னைத் தேடித் தொட முனைந்தபோதுதான் அவன் யாரென்று அறிந்துகொள்ள விரும்பினேன். ஏதேனும் ஒரு வகையில் அவனது செயல்பாட்டைத் தடுப்பது என் நோக்கமாயிருந்தது. தவத்தைக் கலைக்க மலையைப் புரட்டத் தேவையில்லை. ஒரு மலரைக் கொணர்ந்து மடியிலிட்டால் போதும் என்று உங்களுக்கு முன்னமே காட்டியிருக்கிறேன். அன்று கலைந்த அவனது தவம் மீண்டும் கூடி உச்சம் தொடும் வேளையில் மீண்டுமொரு மலர் போதும். அல்லது ஒரு சொட்டு மழை நீர். வீசும் காற்றில் ஓரிழையை உருவியெடுத்துத் தண்மையில் தோய்த்து சஹஸ்ராரத்தை மட்டும் வருடி விலக வைத்தாலும் போதும். நான் எண்ணியது நடந்தேறிவிடும். ஆனால் என்னால் ஏன் இந்த அதிமானுடக் கூட்டத்தின் நடவடிக்கைகளிலிருந்து என் கவனத்தைப் பெயர்த்தெடுத்துக்கொள்ள முடியவில்லை என்று விளங்கவில்லை. மண்ணாசை இல்லாத மனிதரென்று யாருமில்லை. அவரவர் தரத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப அவரவர் ஆசைப்படாதிருந்ததில்லை. வேட்டனின் வேட்கை பெரிதுதான். அதற்கென அவன் மேற்கொண்ட தவமும் செலவிட்ட காலமும் அதனினும் பெரிது என்பதிலும் ஐயமில்லை. அவனைக் கொண்டு மயூரமுகி இன்னும் வேறு எததெற்கெல்லாம் ஆசைப்பட்டுத் திட்டமிட்டிருப்பாளென்று எனக்குத் தெரியாது. அது இன்னும் பெரிதாக, மேலும் உக்கிரமாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அவையனைத்தும் கூடா நோக்கங்களென்று கருவூரார் நினைக்கட்டும். தடுக்கப் பார்க்கட்டும். எனக்கென்ன அதனால்? நான் வந்த பணி முடிந்ததென மீண்டுமென் கூட்டுக்குத் திரும்பாமல் எதனால் இப்படி சிந்தை விட்டுச் சிந்தை பெயர்ந்துகொண்டே இருக்கிறேன்? தோன்றா நிலையில் இத்தனை அலைபாய்வது என் இயல்பென்பதால்தான் ஆதித் தனிமம் என்னை என்றுமே தோன்றா நிலையில் வைத்திருக்கிறது போலும். இப்படியோர் இயல்பை எனக்கு ஏன் அது தரவேண்டும் என்பது மற்றொரு வினா. ஆனால் அதையும் எதையும் போல இதுவும் விடையற்றதுதான்.











Add Comment