இலங்கை, வங்கதேசம், நேபாளம், மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்னவென்று தெரியுமா? இந்நாடுகள் அனைத்திலும் ஜென் ஸீ தலைமுறையினர் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது பல்கேரியாவும் இணைந்துள்ளது.
ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இருக்கிறது.
டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் வீதிக்கு வந்து போராடத் தொடங்கிய ஜென் ஸீ தலைமுறையினர் கொடுத்த அழுத்தத்தினால், பதினோராம் தேதி பிரதமர் ரோஸன் ஸெல்யாஸ்காவ் (Rosen Zhelyazkov) பதவி விலகியிருக்கிறார். போராட்டத்தைத் தொடங்கி வெறும் பத்தே நாள்களில் ஆட்சி மாற்றத்தைச் சாதித்துள்ளனர் பல்கேரிய ஜென் ஸீக்கள்.
பல்கேரியாவில் மலிந்திருக்கும் ஊழலும், மந்தமான பொருளாதாரச் சூழலும் அந்நாட்டு மக்களைக் கொதி நிலையிலேயே வைத்திருந்தன. ஐரோப்பாவில் ஹங்கேரிக்கு அடுத்து பல்கேரியாவில்தான் ஊழல் மிகுதியெனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், போராட்டத்தை உடனடியாகத் தூண்டியது நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட 2026 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம். அந்தத் திட்டத்தில் செலவினங்களை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியும் அடங்கியிருந்தது. இது ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை மேலும் வலுப்படுத்தும் என்ற அச்சத்தை விதைத்தது. இனியும் பொறுமை காக்க இயலாதெனப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.















Add Comment