சில நாட்களுக்கு முன்பு (ஆகஸ்ட் 7) வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யத் தகவல் கொடுப்போருக்கு வெகுமதியாக 50 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது. ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியை விட இது அதிகம். ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளிநாடுகளில் உள்ள போதைக் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவப் படைகளைப் பயன்படுத்த அனுமதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப். அமெரிக்காவில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த அதிரடி முடிவை அறிவித்திருந்தார்.
அதன்படி, செப்டம்பர் 2ஆம் தேதி வெனிசுலாவிலிருந்து போதைப் பொருட்களைக் கடத்திச் சென்ற படகை அமெரிக்க ராணுவம் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பதினோரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்தார். தாக்குதலுக்கு ஆளான படகு, வெனிசுலாவின் கிரிமினல் அமைப்பான ட்ரென் டி அரகுவாவுக்கு (Tren de Aragua) சொந்தமானது என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் போதை கடத்தல் அமைப்பினை மதுரோ வழிநடத்துவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
ட்ரென் டி அரகுவா கிரிமினல் கும்பல், வெனிசுலாவின் டோகோரன் சிறைச்சாலைக்குள் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் டோகோரோன் சிறைச்சாலையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இக்கும்பல், நாளடைவில் சிறைக்கு வெளியே போதைப்பொருள் கடத்தல், கொள்ளை மற்றும் கொலைச் செயல்களில் ஈடுபட்டு மிகப் பெரிய அமைப்பாக விரிவடைந்தது.















Add Comment