உலகம் முழுவதும் சுற்றுலா மிக முக்கியமான தொழில். பெரிய பொருளாதாரம். குறிப்பாக தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகள், அவற்றின் பாரம்பரியம் கலாச்சாரம் இயற்கை வனப்பின் மூலமாக உலகெங்கிலுமிருந்து பல லட்சக்கணக்கான மக்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
ஒருபுறம் சுற்றுலா வளர்ச்சியின் பொற்காலத்தில் திளைக்கின்றன தென் ஐரோப்பிய நாடுகள். மறுபுறம் சுற்றுலாவின் இவ்வளர்ச்சி தங்களுடைய எளிய அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிப்பதாகக் கடுங்கோபத்தில் கொந்தளிக்கின்றனர் இம்மக்கள்.
கடந்த வார இறுதியில் ஸ்பெயின் இத்தாலி மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளின் மிக முக்கியமான பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தேறியுள்ளன. ‘சுற்றுலா பயணிகளே வீடு திரும்புங்கள்’ என்ற வாக்கியங்கள் சுவர்களிலும் ஜன்னல்களிலும் எழுதப்பட்டுள்ளன. இவ்வாக்கியம் தாங்கிய பதாகைகளுடன் பரபரப்பான வீதிகளில் உள்ளூர் மக்கள் பெரும் முழக்கத்துடன் கோஷமிட்டுள்ளனர்.
பார்சிலோனா நகரத்தின் முக்கியமான வீதிகளில் போராட்டக்காரர்கள் சுற்றுலா பயணிகளின் மீது தண்ணீர் துப்பாக்கிகளால் நீரைப் பீச்சியடித்தனர். அந்நகரத்தின் புகழ்பெற்ற சாக்ரடா ஃபமிலியா தேவாலயத்திற்கு செல்லும் வழிகளை அடைத்து சிவப்பு புகை பட்டாசுகளை வெடித்துள்ளனர். மேலும் அங்கிருந்த ஓர் உணவகத்தின் வரவேற்பறையில் பட்டாசு வீசப்பட்டதால் உள்ளேயிருந்த சுற்றுலா பயணிகள் பயத்தில் அதிர்ச்சியடைந்தனர். சென்ற வாரத்தில் இப்படிப்பட்ட போராட்டங்கள் ஸ்பெயின் போர்ச்சுக்கல் மற்றும் இத்தாலியில் ஆங்காங்கே நடைபெற்றன.















Add Comment