ஜூலை முதல் வாரத்தில் பெங்களூருவின் புகழ்பெற்ற அரசு மருத்துவமனையான ஸ்ரீ ஜெயதேவாவில் இதயப் பரிசோதனை செய்து கொள்வதற்காக மக்கள் குவியத் தொடங்கினர். கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த மே, ஜூன் மாதங்களில் 40 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் 35 முதல் 40 வயதுடையவர்கள். ஹாசன் மாவட்டத்தின் மாரடைப்பு மரணங்கள் கர்நாடகா முழுவதும் மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
கொரோனா தடுப்பூசியால்தான் இம்மரணங்கள் நிகழ்கின்றன என்று மாநில முதல்வர் சித்தராமையா இப்பிரச்சினையில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். ஆனால் மத்தியச் சுகாதாரத் துறை இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யச் சிறப்புக் குழு ஒன்றை மாநில அரசு அமைத்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின் படி (CoWIN) ஹாசன் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி அதிகளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி இரண்டாவது இடத்தில் உள்ளது. கோவிட் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பதை எந்த ஆய்வுகளும் இதுவரை உறுதி செய்யவில்லை. மாரடைப்பு குறித்த செய்திகள் வெளிவரும் போதெல்லாம் கொரோனா தடுப்பூசி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். கொரோனா தொற்றுக்குப் பின் மாரடைப்பு மற்றும் பிற இதயச் சிக்கல்களால் ஏற்படும் மரணங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.















Add Comment