மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமல் போய் பதினோரு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்நிகழ்வு இன்றுவரை உலகின் தீர்க்கப்படாத விமான மர்மங்களில் ஒன்றாகவே உள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்ட ஓஷன் இன்ஃபினிட்டி கடல் ரோபோடிக்ஸ் நிறுவனம் டிசம்பர் 30ஆம் தேதி முதல் MH370 விமானப் பாகங்களை மீண்டும் ஆழ்கடலில் தேடும் பணியைத் தொடங்கவுள்ளது. இப்பணி ஐம்பத்து ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
2014 மார்ச் 8 ஆம் தேதி நள்ளிரவு 12.48 மணிக்கு வழக்கம் போல் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்டது போயிங் 777 ரக மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370. 12 விமானப்பணியாளர்கள், 227 பயணிகள் என மொத்தம் 239 மனித உயிர்களைச் சுமந்தபடி பறந்து கொண்டிருந்தது. பயணிகளில் பெரும்பாலானோர் சீனர்கள். மேலும் மலேசியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, இரான், உக்ரைன், கனடா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா, தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
விமானம் மலேசிய எல்லையைத் தாண்டியது. மலேசிய வான் சேவைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இரவு வணக்கம் கூறி விடைபெற்றுவிட்டு வியட்நாம் வான் பரப்பில் நுழையவிருந்தது. விமானி கோலாலம்பூர் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு 1.19 மணிக்குக் கூறிய ‘குட் நைட் மலேசியன் 370’ என்பதே கடைசி ரேடியோ தகவல்.















Add Comment