57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன்
‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு. அப்போது ‘மெட்ராஸ் பிரெசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளுடைய பணிகளைத் தொகுப்பதும், மக்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டுசெல்வதும்தான் இதன் நோக்கங்கள்.
இந்த அமைப்பு தொடங்கப்பட்டு ஓராண்டுக்குப்பிறகுதான் (1885) இந்தியத் தேசியக் காங்கிரஸ் தோற்றுவிக்கப்படுகிறது. பின்னர் இந்தக் குடையின்கீழ் பல அமைப்புகள் ஒருங்கிணைய, அது இந்திய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக, அதை வழிநடத்திச் செல்லும் முதன்மை இயக்கமாக மாறியது.
ஏப்ரல் 23 அன்று, மெட்ராஸ் மகாஜன சபையும் அந்த மாகாணத்துக் காங்கிரஸும் சேர்ந்து காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் ஒரு வரவேற்பு விழாவை நடத்தினார்கள். ராயப்பேட்டையில், அப்போதைய MMS தலைவரான சையத் முகம்மதுவின் வீடாகிய ‘ஹூமாயூன் மன்சிலில்’ இந்தக் கூட்டம் நடைபெற்றது. புல்லாங்குழல், ஆர்மோனிய இசை நிகழ்ச்சிகள், வரவேற்புரையைப் படித்துக் கொடுத்தல், ‘நாங்கள் இனிமேல்தான் நாட்டுப் பணியில் ஈடுபடப்போகிறோம். அதனால், எங்கள் குறைகளை மன்னித்து ஆதரியுஙக்ள்’ என்கிற காந்தியின் வழக்கமான ஏற்புரை ஆகியவை அரங்கேறின.
அதே நாளில் Associated Press என்ற ஊடக அமைப்பு காந்தியைப் பேட்டியெடுத்தது. அதில் தன்னுடைய இந்தியப் பயணம், ஆய்வைப் பற்றியும், ஆசிரமத் திட்டத்தைப் பற்றியும் காந்தி சுருக்கமாகக் குறிப்பிட்டார்.















Add Comment