தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மழைக்காலப் பாதிப்புகளைத் தடுக்கச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆனால் வானிலை, பருவமழை குறித்து முன்கூட்டியே கணித்து அரசையும் மக்களையும் எச்சரித்துப் பாதுகாக்க வேண்டிய இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.
நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது இந்திய வானிலை ஆய்வு மையம். அதற்கு முன்னர், 1796ஆம் ஆண்டே சென்னையில் வானிலை ஆய்வு நிலையத்தை பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கிவிட்டது. இந்த மையம் தற்போது ஒன்றிய அரசின் இந்தியப் புவி அறிவியல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பகங்களைக் கொண்டு இயங்கி வரும் இந்தத் துறை, இஸ்ரோ, இந்திய ராணுவம் உள்ளிட்ட மற்ற பல துறைகளுடன் இணைந்து வானிலை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலகளவில் வானிலை ஆய்வுக்காகச் சொந்தமாகச் செயற்கைக்கோள்களைக் கொண்டிருக்கும் நிறுவனம் IMD மட்டுமே.















Add Comment