26. ராட்சசனின் வாய் பிளந்தது
குகை பூதம் என்ற புதிய புரளி பரப்பப்பட்டது. ஏற்கெனவே கன்னி நிலங்களில் கால்பதித்து மலைத் தெய்வங்களின் கோபங்கள் உச்சத்துக்குப் போயிருக்கிறது. இதில் இயற்கை வளங்களை படிப்படியாக அழித்து, கடைசியில் அவள் அடிமடியிலேயே கை வைக்கலாமா என்ற முணுமுணுப்புகள் பெரிதாகின. இதெல்லாம் வழக்கம்போல இடதுகையால் ஒதுக்கப்பட்டன என்றாலும், அது எப்படி ஒரு மனிதனைப் பாறை தூக்கி எறிய முடியும் என்பதுதான் நேரில் இந்தச் சம்பவத்தைப் பார்த்த சில பிரிட்டிஷாருக்குப் புதிராக இருந்தது.
தொழிலாளிகள் வரப் பயந்தார்கள். சுவர் இருந்தால்தானே சித்திரம்? விடுதலை என்ற ஆசை காட்டி ஒருவேளை தங்களின் உயிரையே எடுக்கும் உத்தியோ இது என்று கைதிகள் யோசித்தார்கள். சற்று கவலைப்பட்ட பிரிட்டிஷ் பொறியாளர்கள், அங்கே ஓர் அறிவியல்பூர்வமான சோதனையை நடத்திப்பார்க்கலாம் என்று கேட்டுக்கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் தாமதம். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு காரணம். எல்லோருக்கும் எரிச்சல் வந்தது. எல்லோருக்கும் இது எதற்கு என்ற சோர்வு வந்தது.
மண் பரிசோதகர்கள் வந்தார்கள். மாற்றுப்பாதையைக் கண்டுபிடிக்கப் பொறியாளர்கள் வந்தார்கள். குகை பூதம் உண்மையாக இருக்குமோ என்று யோசனையில் மதபோதகர்கள் வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். பாறை வெடித்த இடத்தில், இறுகிப்போயிருந்த பாறை இடுக்குகளிலிருந்து விஷவாயு கசிந்திருந்ததைப் பரிசோதகர்கள் கண்டுபிடித்தார்கள். வெகு வேகமாக அழுத்தம் பீறிட, அது வெளிவந்த வேகத்தில் தொழிலாளி தூக்கி எறியப்பட்டிருக்கலாம் என்று காரணம் சொன்னார்கள். வாயு தாக்கியதும் வேகமாகத் தூக்கி எறியப்பட்டதால், தலையில் பாறை வேகமாகப் போனதுதான் தலை பிளந்ததற்குக் காரணம் என்று மருத்துவ அறிக்கையும் பெற்றுத் தந்தார்கள்.















Add Comment