52. கால்குலேட்டரைத் தாண்டி…
நீங்கள் பணம் படைக்கிறீர்கள், மகிழ்ச்சி. ஆனால், எதற்காகப் படைக்கிறீர்கள்?
என்னிடம் இத்தனை லட்ச ரூபாய் உள்ளது என்று அடுக்கிவைத்து அழகுபார்ப்பதற்காகவா நாம் பணம் சேர்க்கிறோம்? யாரிடமும் கையேந்தாமல் நம்முடைய அடிப்படைச் செலவுகளைச் செய்துகொண்டு, அவ்வப்போது நாம் விரும்பும் விஷயங்களை வாங்கிக்கொண்டு, பிறருக்கு உதவிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான் பணம். இல்லாவிட்டால் அது வங்கிக் கணக்கிலோ, பங்குச் சந்தையிலோ உட்கார்ந்திக்கும். அது நம் பணம் என்கிற மகிழ்ச்சி நமக்கு இருக்கும்தான். அதற்குமேல்? அது ஒரு பொருளற்ற செல்வமாகத்தான் இருக்கும்.
பணம் படைக்கும் கலையில் ஓரளவுக்குமேல் ஆழமாகச் செல்கிறவர்கள் அதை ஒரு சவாலைப்போல், போட்டியைப்போல் எடுத்துக்கொடுவிடுகிறார்கள். ‘என்னால் இயன்றவரை கூடுதலாகச் சம்பாதிப்பேன், அதில் இயன்றவரை கூடுதலாகச் சேமிப்பேன், அதைச் சரியான இடங்களில் முதலீடு செய்து சராசரிக்குமேல் வருவாயைப் பெறுவேன்’ என்கிற (நல்ல) எண்ணங்களை இன்னும் இன்னும் நீட்டும்போது அவர்கள் பணம் படைக்கும் இயந்திரங்களாகிவிடுகிறார்கள், வாழ்க்கையை அனுபவிக்க மறந்துவிடுகிறார்கள், தங்களைச் சுற்றியிருக்கிற அன்புக்குரியவர்கள், அதாவது, தாங்கள் யாருக்காகப் பணம் சம்பாதிக்கிறோமோ அவர்களையே துன்புறுத்தத் தொடங்கிவிடுகிறார்கள்.
Add Comment