பணக்கார ஏழை
புதின் பதவியேற்றபோது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் இரண்டு: நிலையான ஆட்சியும் பொருளாதார வளர்ச்சியும். ரஷ்யாவின் மாகாணங்களுக்குப் பரவியிருந்த அதிகாரத்தை மத்தியில் ஒருங்கிணைக்கும் வேலைகள் முடிந்துவிட்டன. பண முதலைகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசாங்கத்தை மீட்பதும் நிறைவேறியிருந்தது. அரசாங்கத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கத் தூண்டும் ஊடகங்களையும் கைக்குள் அடக்கியாகிவிட்டது.
இனி உள்நாட்டுப் புரட்சிக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் உயர்மட்ட ஒழுங்கீனங்கள் மக்களுக்குத் தெரியப் போவதில்லை. அப்படியே யாராவது இதை வெளிப்படுத்தினாலும் இருக்கவே இருக்கிறது விதவிதமான ரசாயன விஷங்கள். நோய் என்னவென்று கண்டுபிடிப்பதிலேயே அவர்களது மீதி வாழ்க்கை கழிந்துவிடும். நிலையான ஆட்சிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது.
அடுத்து ரஷ்யாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் புதின். பிரச்சினைகள் தெளிவாகத் தெரிந்தன. அரசுக்கு நெருக்கமானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே சம்பாதித்தார்கள். ரஷ்யாவின் மீதிருந்த நம்பிக்கை உலக முதலீட்டாளர்கள் மத்தியில் குறைந்திருந்தது. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றினார்கள்.















Add Comment