வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது அமலாக்கத்துறை முதல் முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு வாத்ராவுக்குச். சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மூலம் ஹரியானா மாவட்டத்திலுள்ள குருகிராம் பகுதியில் மூன்றரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நில ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஓம்காரேஸ்வர் பிராப்பர்டிஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ஏழரை கோடி ரூபாய்க்கு அந்நிலம் வாங்கப்பட்டுள்ளது. விவசாய நிலமான அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி கோரப்பட்டுள்ளது. பூபிந்தர் சிங் ஹூடா முதல்வராக இருந்த அப்போதைய ஹரியானா காங்கிரஸ் அரசு அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் அந்த நிலத்தை டிஎல்எஃப் நிறுவனத்துக்கு வாத்ராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் ஐம்பத்து எட்டு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இதன் மூலம் வாத்ரா சில ஆண்டுகளில் ஐம்பது கோடி லாபம் ஈட்டியுள்ளார்.
நேர்மையாகப் பணிபுரிந்தமைக்குத் தேசிய அளவில் புகழ் பெற்றவர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. தன்னுடைய நேர்மை காரணமாகப் பணிக் காலத்தில் அறுபது முறைக்கு மேலாகப் பணி மாறுதல் பெற்றவர். 2012ஆம் ஆண்டு இந்த குருகிராம் நில ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளைக் கண்டறிந்தார். அதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார். உடனே விதை மேம்பாட்டுக் கழகத்துக்குப் பணி மாறுதல் செய்யப்பட்டார். குருகிராம் நில ஒப்பந்த முறைகேடு அவருக்கு நிறையப் பணி மாறுதல்களையும் மன அழுத்தங்களையும் வழங்கின. ஆனால் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் எடுத்த நடவடிக்கை இன்று வரை வாத்ராவுக்குத் தலைவலியாக உள்ளது.















Add Comment