6. தோற்றப் பிழை
நதியின் இக்கரை நோக்கி அபுது பறந்து வருவதைக் கண்டேன். என்ன ஆனாலும் இம்முறை அதை விட்டு விலகுவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். எனக்கு ஐயமேயில்லை. மிக நிச்சயமாக ஒரு பெருஞ்செயலின் கண்ணியாக அது நிறுவப்பட்டிருக்கிறது. அது நல்வினையா தீவினையா என்று தெரியாது. அபுதுவை இயக்குபவன் உத்தமனா மத்தியமனா அதமனா என்று தெரியாது. நிலத்தில் கால் பதித்து வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒரு பாதையிலும் அபுது முற்றிலும் வேறொரு பாதையிலும் மிகத் தீவிரமாகச் சென்றுகொண்டிருப்பது போலத் தோன்றியது. இது என் தோற்ற மயக்கமாக இருக்கலாம். அபுதுவல்ல; அதனைக் கொண்டு எதையோ இயக்குபவனை அல்லது இயக்க நினைப்பவனைத் தெரிந்துகொண்டாக வேண்டும். அவன் மூலமாகத்தான் இவனைக் குறித்து அறிய முடியுமென்றால் அதுதான் என் முதல் பணியாக இருக்க வேண்டும்.
நான் பதற்றம் கொள்கிறேன். என் வெப்ப நிலை முன்னுக்குப் பின்னாக அலைபாய்கிறது. நான் சிந்திக்கிறேனென்று தெரிகிறது. ஆனால் என் சிந்தையின் இருப்பிடம் எனக்குப் புரியவில்லை. என் பொருள் தனியொரு கருவாக நிறுவப்பட்டிருப்பது போல என் சிந்தை அண்ட வெளியில் புலப்படாத கோள்களுள் ஒன்றாகச் சுழன்றுகொண்டிருக்கிறதாவென்று தெரியவில்லை. ஆனால் ஒன்று விளங்கிவிட்டது. சொல் என்பதும் ஓர் உயிர். பிறந்திராவிடினும் அதற்கு உணர்ச்சியுண்டு. இச்சையுண்டு. வேட்கையுண்டு. ஆர்வங்களின் கதகதப்புக்குள் சூதமாக* மிதந்துகொண்டிருப்பதன் சொகுசு அதற்கும் வேண்டித்தான் இருக்கிறது. அழிக்கும் சொல்லாயினும் நானொரு உயிர்.










Add Comment