10. இரண்டாவது சண்டாளன்
வெட்டிச் சாய்க்கப்பட்ட கருமருதினை*ப் போலக் குடிசைக்குள் அவன் மல்லாந்து கிடந்தான். முதல் சில நாழிகைகள் போதையில் திளைத்திருந்தபோது அந்த நீலக்கிளியையே நினைத்துக்கொண்டிருந்தான். அது தத்தி நடந்ததையும் தாவிப் பறந்ததையும் மீண்டும் மீண்டும் சிந்தைக்குள் நிகழ்த்திப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
பிறகு போதையின் அடர்த்தி குறைந்து உறக்கத்தின் வெளிக்குச் சென்றான். அக்கணமே அவன் கனவின் திரை விரிந்து, பெரியதொரு மண் கலயத்துக்குள் இருந்து இரண்டு கரங்களாலும் செஞ்சாலி* அள்ளி எடுத்துக் குவித்து வைத்தான். நீலக்கிளி மெல்ல நெருங்கி வந்து அதைக் கொத்தித் தின்றது. பிறகு அவன் தோளில் ஏறி அமர்ந்தது.
அவனது அக்கனவை நான் மிகத் தெளிவாகக் கண்டேன். ஒரு தருணம். ஒரு சம்பவம். ஒரு கிளி அவனது குடிசைக்கு வருகிறது. இது நடந்தது. கிளி யாராகவும் இருக்கட்டும். அதன் நோக்கம் என்னவாகவும் இருக்கட்டும். அது வந்தது உண்மை. நான் சாட்சி. அவன் அதற்கு உணவிட்டான். அது கொத்தித் தின்றது. பிறகு சென்றுவிட்டது. அவன் போதையில் ஊறித் திளைத்தவண்ணம் குடிசையின் வெறுந்தரையில் கால் நீட்டிப் படுத்தான். அவன் சிந்தை முழுதும் அக்கிளியே நிறைந்திருந்தது. அதன் நீல நிறம். அது தத்தி நடந்த அழகு. கொத்தித் தின்ற லாகவம். அவனது கரத்திலும் பிறகு தோளிலும் அச்சமின்றி ஏறி அமர்ந்த தோற்றம்.










Add Comment