83. விழாக் கோலம்
கண்ணெட்டும் தொலைவெங்கும் அகல் விளக்குகளின் ஆவளி தெரிந்தது. தஞ்சப்புரி மொத்தமும் விண்மீன்களால் நெய்யப்பட்டாற்போல வீடுகள் அனைத்தும் சுடர் விட்டன. இன்னும் புலர்ந்திராத பொழுதிலும் வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. ஒவ்வொருவரும் புத்தாடை அணிந்திருந்தார்கள். எங்கெங்கும் மங்கல முழக்கம் கேட்டது. மூலைக்கொரு சிவனடியார்க் கூட்டம் தேவாரம் ஓதிக்கொண்டிருந்தது. அவர்களைச் சுற்றி நூறு நூறு பேர் கூப்பிய கரங்களுடன் நின்றிருந்தார்கள். மறுபுறம் ஓர் அந்தணர்க் கூட்டம் மங்கலக் கும்பம் ஏந்தி, மந்திரம் சொன்னபடி கடந்து சென்றதைக் காண முடிந்தது. நகரின் ஒவ்வொரு வீதியிலும் இருந்த கோயில்களின் வாசலிலும் இசைவாணர்கள் மங்கல இசை பாடிக்கொண்டிருந்தார்கள். எல்லா கோயில்களுக்கும் மக்கள் கூட்டம் சாரி சாரியாகப் போய் வந்தபடி இருந்தது. எங்கெங்கும் இராஜகேசரி ராஜராஜனை வாழ்த்தும் ஒலி ஓங்கி ஒலித்தபடி இருந்தது.
விடியும் முன்பே இத்தனை ஆரவாரமென்றால் இன்று நாளெல்லாம் நகரம் எப்படி இருக்கும்?
என்று குறிப்பிட்ட யாரையும் நோக்காமல் கூட்டத்தைப் பார்த்துப் பொதுவாக வியந்தான் சார்வாகன்.









Add Comment