103. கட்டுண்டவன்
சார்வாகனே, கேள். தேங்கிய நீரெனில் பாசி. ஓடும் நதியெனில் சுழல். மருந்தாகும் உணவெனினும் மிகுதியாக உட்கொண்டால் அதுவே நஞ்சாகும். தாங்கும் நிலம் அதிரவும் செய்யும். ஓங்கு பெருங்கடலில் புயல் மையம் கொள்ளும். தீயின்றி ஒளியில்லை. வளியின்றி வாழ்வில்லை. முள்ளின்றி மூலிகை வனமில்லை. பிரம்மம் மாயையின் துணையுடனே தன் படைப்புச் செயலை நிகழ்த்துகிறது. அது உறையும் ஒவ்வோர் அணுவிலும் இது உடனிருக்கும். இது உனக்கு விளங்குமானால் மனித குலத்தை ஆரத் தழுவிய மாயையின் முகம், அகங்காரமெனத் துலங்கும்.
மன்னியுங்கள் ஐயனே. இது உங்கள் தத்துவம்.
இது உன் வினாவுக்கான விடையின் தொடக்கம் என்பதை எது மறைக்கிறதெனச் சிந்தித்துப் பார். அதைத்தான் மாயை என்கிறேன். அதன் முகத்தையே உன் குறுக்கீட்டில் காண்கிறேன்.
சார்வாகன் அமைதியானான்.
நீ சித்தர்களைக் குறித்துச் சொன்னாய். ஆதி சிவன் முதல் முதலில் பிரம்மத்தை அறிந்தான். அவன் வழியில் வந்த அத்தனை பேரும் பிரம்மம் உறையும் மாயப் பெருநிலவெளியில் வாழ்ந்து கடக்கும் மனித குலம் அம்மாயையைக் கண்டறிந்து களையவே வழி காட்டி வந்தார்கள். எண்ணிப் பார், உடலத்தையும் உயிரையும் ஆன்மாவையுமன்றி எந்தச் சித்தனும் சிந்தித்ததில்லை, பேசியதுமில்லை.











Add Comment