கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது திமுக. கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன தவெக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியிருந்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லை. திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தோழமைக் கட்சிகள், தவெகவின் தோழமைக் கட்சிகளாக உருவெடுத்தன. அதன் விளைவாக, தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவானது.
உண்மையில், இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைப்போம் எனத் தீவிரமாக நம்பியது திமுக. ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுகவின் அமைச்சர்கள் பலரும் தோல்வியைத் தழுவினர். எதிர்பாராத அந்தத் தோல்வியைத் தாங்க முடியாத திமுக தலைமை, தோல்விக்கான காரணத்தை ஆராய முடிவெடுத்தது. அதற்கென 36 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் நேரில் சென்று கருத்துகளைக் கேட்டறிய உத்தரவிட்டது. அப்படிப் பெறப்பட்ட கருத்துகள் திமுக தலைமைக்குச் சில உண்மைகளை உணர்த்தின.
கடந்த திமுக அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும், கட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் ஒருசேர நின்று இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவில்லை என்பதுதான் முதன்மையான குற்றச்சாட்டாக இருந்தது. தேர்தலுக்கு முன்பே இது குறித்து வெளிப்பட்ட கட்சியினரின் கருத்துகளை திமுக தலைமை உரிய நேரத்தில் கவனத்தில் கொள்ளாதது இந்தத் தோல்விக்கான காரணங்களில் முதன்மையானது. ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த திமுகவினர், மக்களோடு இணைந்திருந்த திமுகவினரைக் கண்டுகொள்ளாததால் மக்களும் திமுக வேட்பாளர்களைக் கவனத்தில் கொள்ளவில்லை.
















Add Comment