108. புலரும் பொழுது
மனிதர்களின் சிந்தையை ஊடுருவத் தொடங்கிய பின்பே அகங்காரம் என்ற சொல்லின் பொருள் எனக்குத் துலங்கியது. எண்ணிப் பார்த்தால் நாணம் மேலிடுகிறது. கருவினின்றே வெளிப்படாத சொல்லாயினும் எனக்குள்ளும் அது இருக்கத்தான் செய்கிறது. என்னைக் குறித்து உங்களிடம் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறேனென்று எண்ணிப் பார்க்கிறேன். நிகரற்ற பேரழிவுச் சொல் என்பதே அதன் சாரமாக இருக்கும். அது உண்மையே என்றாலும் பெருமை கொள்ள அதில் என்ன உள்ளதென்று விளங்கவில்லை. நான் சார்வாகனின் சிந்தைக்குள் அமர்ந்திருக்கிறேன். இங்கே எனக்குத் தூசளவு தொலைவில் கருவூர்ச் சித்தர் இருந்தார். என்னால் அவரது சிந்தைக்குள் ஊடுருவ இயலவில்லை. இரண்டாவது முறையாகச் சில கிழமைகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் சிந்தையைக் கருதி, அதில் இருந்தவற்றைப் படித்தறிந்தபோது மீண்டும் மீண்டும் மயூரமுகியின் சிந்தைக்குள் ஊடுருவ முடியுமா என்றுதான் முயற்சி செய்தேன். இயலவில்லை.
எல்லாம் ஏதோ ஒரு காரணம் பற்றி வரையறுக்கப்படுகிறது. வரையறுக்கப்படுபவை குறித்த விவரங்கள் வெளிப்படையாக இருப்பதில்லை. கருவூர்ச் சித்தருக்கே இதுதான் விதிக்கப்பட்டதென்னும்போது நானெல்லாம் ஒரு பொருட்டல்ல. என் எல்லைகள் எங்கெங்கே வரையறுக்கப்படுகின்றன என்பதை விழிப்புணர்வுடன் கவனிக்கிறேன். அது ஆதிப் பெருந்தனிமத்தின் சித்தம். அதை வணங்கி, விலகி நிற்பதன்றி நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை.
இது தோன்றிய நொடியே நான் வேட்டனின் சித்தத்தினின்று விலகி, சார்வாகனை கருதி, அங்கே வந்து சேர்ந்துவிட்டிருந்தேன். அவன் சித்தரின் உத்தரவின்பேரில் தத்தனைச் சந்திப்பதற்காகக் குடந்தைக்குப் புறப்பட்டிருந்தான். வழியெங்கும் அவன் சித்தரிடம் கேட்ட சிலவற்றை எண்ணி எண்ணி ரசித்துக்கொண்டிருப்பது எனக்குச் சிறந்த கேளிக்கையாக இருந்தது. அவற்றில் ஒன்று பின்வருவது:











Add Comment