122. நானா?
பாதம் பதிகிற நிலமெல்லாம் பொத்துக்கொண்டு தீக்கங்குகள் மேற்கிளம்பித் தாக்குவது போலச் சார்வாகன் துள்ளித் தவித்து விரைந்தோடிக்கொண்டிருந்தான். சில நொடிகள் அது ஓட்டமாக இருந்தது. சில நொடிகளுக்கு அவ்வேகம் மட்டுப்பட்ட நடையானது. எதிர்பாராத போதில் சூறை நிகர்த்த வேகங்கொண்டு பாயவும் செய்தான். ஆனால் எங்கும் நிற்கவில்லை. நான் எண்ணிப்பாராத கணத்தில் அவனது சிந்தை எட்டிப் பிடித்து ஆக்கிரமித்துக்கொண்ட மல்லனே அவனைச் செலுத்திக்கொண்டிருந்தான் என்பது தெரிந்தது. தெரியாததெல்லாம் ஒன்றேதான். தான் இல்லாத தருணமென்று நொடிப் பொழுது அமைந்தாலும் சார்வாகனைக் களவாடிச் செல்ல ஒரு கூட்டம் காத்திருப்பது தெரிந்தும் கருவூரார் எப்படி இதனை அனுமதிக்கிறார் என்பது.
வேறு விதமாகவும் எனக்கோர் எண்ணம் தோன்றியது. தன்னியல்பில் முயற்சி செய்து சார்வாகனால் வேட்டனை நெருங்க இயலாதென்று அவர் நினைத்திருக்கலாம். அவனே கவர்ந்து செல்ல வழி அமைத்து வைப்பதன் மூலம் சார்வாகனின் அலைதலைக் குறைக்க எண்ணியிருக்கலாம். ஆனால் அவன் ஓட்டமும் நடையுமாக விரையும் பாதையில் ஐயனே, ஐயனே என்று பரிதவிப்போடு பின்னால் ஓடி வந்த தத்தனைக் காணத்தான் சங்கடமாக இருந்தது. சார்வாகனேகூட ஒரு காதம் ஓடலாம், இரண்டு காதங்கள் நிற்காமல் ஓடலாம். அதற்கு அப்பால் அவனால் மட்டும் எப்படி முடியும்? ஆனால் அவனைச் செலுத்திக்கொண்டிருந்த மல்லன் அவனைத் தூக்கிச் சென்று விடுவான். எனக்குத் தெரியும்; தனியே எங்கேனும் தூக்கிச் சென்று இறக்குவானே தவிர நிச்சயமாக வேட்டனின் முன்னால் அல்ல. அதற்கு வழியில்லை, வாய்ப்புமில்லை.
இரண்டு சங்கதிகள் எனக்கு நினைவுக்கு வந்தன. வேட்டனும் அவனது அம்சமான சார்வாகனும், தனது பிரதி பிம்பங்களாக அவன் படைத்திருக்கும் இருவரும் ஆக மொத்தம் நால்வரும் ஒன்றிணையும் நாளில் தனது இலட்சியம் நிறைவேறுமென்று வேட்டன் ஒருமுறை கூறியிருக்கிறான். வேறொரு தருணத்தில் மயூரமுகி இன்னொன்றைச் சொல்லியிருக்கிறாள். வேட்டன், சார்வாகனை நேரில் சந்திக்கவே முடியாது என்பது அது. இதன் பொருளை நான் விளங்கிக்கொண்ட விதம் இதுதான்,











Add Comment