124. திரு
புலர்ந்துவிட்டிருந்தது. வேரகத்தின் குடியானவர்கள் வயல்வெளிகளை நோக்கிச் செல்லத் தொடங்கியிருந்தார்கள். பெண்கள், செப்புக் குடங்களுடன் தடாகத்தினை நோக்கிச் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருந்தது புலப்பட்டது. பட்சிகள் கீச்சிட்டுப் பறந்தவண்ணமிருந்தன. கடம்ப மரத்தினடியில் வழிப்போக்கர்களைப் போலக் கருவூர்ச் சித்தரும் சார்வாகனும் அமர்ந்திருந்தார்கள். மூர்ச்சையுற்றுக் கிடந்த பாரதாய தத்தனின் சிரத்தைச் சித்தர் கவனமாக ஏந்தித் தன் மடிமீது கிடத்திக்கொண்டிருந்தார். அந்தப் பக்கமாக யார் நடந்து சென்றாலும் யாரோ மூன்று வழிப் போக்கர்களில் ஒருவன் இன்னும் உறங்கி எழவில்லை என்பது போல அது தோற்றம் தரும். யாருக்கேனும் சித்தரின் முகம் பரிச்சயமாகியிருந்தால்தான் சிக்கல். நெருங்கி வந்து பேசத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் அதைக் குறித்துக் கவலை கொள்ள அவசியமில்லை. அவர்பாட்டை அவர் பார்த்துக்கொள்வார். சார்வாகனுக்கு இருந்த கவலையெல்லாம், தத்தன் இன்னும் கண் விழிக்கவில்லையே என்பதுதான்.
ஐயனே, இந்தச் சிறுவனை எழுப்பி அமர வைக்க மாட்டீர்களா? அல்லது எனக்கு உத்தரவளியுங்கள். ஆங்கொரு தடாகம் உள்ளது போலத் தெரிகிறது. நான் போய் நீர் சேந்தி வருகிறேன்.
வேண்டாம், நீ இரு,
என்று சித்தர் சொன்னார்.
நெடுநேரம் மூர்ச்சையுற்றிருப்பது அபாயமல்லவா?
சித்தர் புன்னகை செய்தார்.











Add Comment