127. வேறொரு வெய்யோன்
அவர்கள் பதற்றத்தில் இருந்தார்கள். ஒவ்வொருவருடைய வதனத்திலும் கவலையின் நிழல் தென்பட்டது. பேசும் மொழியில் அது வெளிப்பட்டது. அசைவுகளில் தென்பட்டது. நிலம் தரிக்காது அலைபாய்ந்துகொண்டிருந்த தன்மையில் புலப்பட்டது. நான் அமைதி கொள்ள வேண்டும், நான் நிதானத்துக்குத் திரும்பவேண்டும் என்று வேட்டன் மீண்டும் மீண்டும் தனக்குள் கூறிக்கொண்டதைக் கேட்டுக் கேட்டு எனக்குச் சலிப்பே உண்டானது. நிதானமென்பது நினைப்பதால் அல்ல; நினையாதிருப்பதனால் உண்டாவதல்லவா?
ஆனால் ஒரு விதத்தில் நான் இதனை எதிர்பார்த்துத்தான் வேட்டனின் சிந்தையைக் கருதி அதில் பரவி அமர்ந்தேன். சார்வாகன் தவத்தில் அமர்வதற்கு முன்னமே எனக்கு அந்த எண்ணம் தோன்றிவிட்டது. அவனோடு ஒன்றிரண்டு சொற்கள் பேசிவிட்டு அம்மாயப் பட்சியும் மல்லனும் மறைந்து போன பிறகு அவர்கள் விவாதிப்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் அதற்கெல்லாம் அவகாசமே தராமல் கருவூர்ச் சித்தர் இடைப் புகுந்து மாபெரும் தாண்டவத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றுவிட்டார்.
மீண்டும் மீண்டும் நான் சார்வாகனின் அச்சத்தின் தடமும் தென்படாத சொற்களில் தோய்ந்து மீண்டுகொண்டிருந்தேன். தன்னையோர் ஆத்திகனாகவும் மதவாதியாகவும் அவர் மாற்ற முயல்கிறாரா என்பதை எப்படியும் அவன் கேட்பான் என்பதை நானறிவேன். ஆனால் அத்தனை எளிதாக, ஓரிடத்திலும் சுற்றிச் செல்லாமல் மிக நேரடியாகக் கேட்பான் என்று எண்ணியிருக்கவில்லை. கருவூராரை அவன் மிகவும் மதித்தான். அதில் சற்றும் ஐயமில்லை. ஆனால் அவனது உள்ளத்தில் மிகுந்திருந்த மதிப்பு தனது சுயத்துக்குச் சற்றும் ஊறு செய்யாதிருக்க வேண்டுமென்பதில் மிகத் தெளிவாக இருந்தான்.











Add Comment