128. பிட்சைக் கலயம்
எனக்குச் சித்தம் கலங்கவில்லை. உள்நோக்குத் திறன் மங்கவில்லை. எதைக் காண்கிறேனோ அதனைத்தான் சொல்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட அதே வேரகம். நீங்கள் குறிப்பிட்ட அதே கடம்ப மரம். அதே இடத்தில்தான் சார்வாகன் இருக்கிறான். சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறான். ஆனால் ஆசனமல்ல. அவனது விழிகள் மூடியிருக்கின்றன. மிக நிச்சயமாக அவன் தவத்தில்தான் இருக்கிறான். ஆனால் நோக்கு குவியவில்லை. அவனது மூடிய விழிகளுக்குள் அலைபாய்ச்சல் இருக்கிறது. விரல்களில் சிறு அசைவுகளைப் பார்க்கிறேன்.
வேட்டன் தனக்குள் கண்டு சொன்ன அனைத்தையும் நானும் கண்டேன். அவனது சித்தத்தினுள்தான் அப்போது இருந்தேன். ஆனால், அவன் கூறிய எதையும் மயூரமுகி ஒப்புக்கொள்ளவில்லை.
இல்லை வேட்டனே. நாம் இடறுகிறோம். உன் பதற்றம் உனக்கு அவனது மாயத் தோற்றத்தைத்தான் காட்டுகிறது. உண்மையில் அவன் மறைக்கப்பட்டிருக்கிறான். எனக்குத் தோன்றாத சார்வாகன் உனக்குத் தென்பட வாய்ப்பே இல்லை,
என்று அவள் சொன்னாள்.
முதல் முறையாக உன்னை மறுப்பதற்கு வருந்துகிறேன் தமக்கையே. ஆனால் நான் காண்பது மாயத் தோற்றமல்ல. உண்மையிலேயே அது சார்வாகன்தான்.











Add Comment