153. சேரிடம்
முற்பிறப்பில் தானும் தன் தாய் தகப்பனும் செய்த புண்ணியங்களின் பலனாகச் சில காலம் சொர்க்கத்தில் வசிக்க விதிக்கப்பட்டிருந்த சிவந்தி, மீண்டும் ஒரு பிறப்பெய்தியபோது அவளது தாய் தகப்பனுமே அறியாத வண்ணம், அவர்களுக்கே மீண்டும் மகளாகப் பிறந்தாள். இப்பிறப்பில் அக்குடும்பம் திருவீர நாராயணபுரமெனும்* பிராமணச் சேரியை* அடுத்திருந்த நத்தமலை என்னும் கிராமத்தில் வசித்து வந்தது. சிவந்திக்கு அவளது பெற்றோர் அப்போது மெல்லி எனப் பெயரிட்டிருந்தார்கள். வளர்ந்து பருவமெய்திய பின்னர் மெல்லிக்கு அவளது பெற்றோர் குடந்தை மாநகரில் வசித்துக்கொண்டிருந்த தமது உறவின் வழி வந்ததொரு பிள்ளையைத் தேர்வு செய்து மணமுடித்து வைத்தார்கள். கல்லாடன் என்னும் பெயர் கொண்ட அவ்வாலிபனே முன்னிரு பிறப்புகளுக்கு முன்பு உலகளந்தானாகப் பிறந்து சிவந்தியை மண முடிக்க இருந்து, தவறவிட்டவன்.
இயற்கையின் இவ்விசித்திர ஏற்பாட்டினை அறியாத அக்குடும்பம் விதிக்கப்பட்டது போலவே வாழ்ந்து வந்தது. ஆனால் இம்முறை கல்லாடனுக்கும் மெல்லிக்கும் நல்ல முறையில் திருமணம் நடந்து, அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னர் மெல்லி கருவுற்றாள். அவளது பெற்றோர், பிரசவத்துக்காக அவளை நத்தமலைக்கு அழைத்து வந்திருந்தார்கள். குடந்தையில் உழவுத் தொழில் செய்து வந்த கல்லாடன், திங்களுக்கு ஒருமுறை நத்தமலைக்கு வந்து தன் மனைவியைப் பார்த்துவிட்டுச் செல்வான்.
பிரசவமாகிப் பிள்ளை பிறந்ததும் அவர்களே சொல்லி அனுப்புவார்கள், அப்போது சென்று பார்த்துக்கொண்டால் போதுமென்று அவனது சுற்றத்தார் அவ்வப்போது அவனைக் கடிந்துகொண்டார்கள் எனினும் அவன் கேட்டானில்லை. என் மனைவியையும் அவள் சுமக்கும் என் வாரிசையும் நான் சென்று பார்த்துக்கொள்வதில் உங்களுக்கு எங்கே வலிக்கிறது என்று பேசி அவர்களது வாயை அடைத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். குடந்தை மாநகரில் கல்லாடனையும் அவனது குடும்பத்தாரையும் நன்கறிந்த அனைவரும் சந்திக்கும்போதெல்லாம் இதன்பொருட்டு அவனைக் கேலி செய்து மகிழ்வார்கள்.











Add Comment