52. மாசற்றது
நான் பல விவரங்களால் நிரப்பப்பட்டுக்கொண்டிருந்தேன். உள்ளும் புறமும் துகளனைய இடைவெளியுமற்று எங்கெங்கும் விவரங்கள் கொட்டிக் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. சார்வாகனைக் குறித்த விவரங்கள். வேட்டன் எறிபத்தனைக் குறித்த விவரங்கள். சோழப் பேரரசினைக் குறித்த விவரங்கள். விஜயாலயன் தொடங்கி அதனை ஆட்சி செய்து வரும் வம்சத்தினைக் குறித்த விவரங்கள். எந்தப் புள்ளியில் வேட்டன் எறிபத்தன் சோழனோடு தொடர்பு கொண்டான், எதனால் இப்பெருங்கதையின் ஊற்றுக் கண் திறந்துகொண்டதென்ற விவரங்கள். அருமொழியையும் அவனது சந்ததியினரையும் அழித்தொழிப்பதன் வாயிலாக ஒரு பெரும் வலயப்பாதையினைத் தகர்ப்பதன் சாதகங்களை உத்தேசிக்கும் பல தரப்பினரின் திட்டங்களைக் குறித்த விவரங்கள். அதன் மூலம் அவர்கள் பெற விரும்பிய லாபங்களைக் குறித்த விவரங்கள். அவையெல்லாம் ஏன் நடைபெறவே கூடாதென்பதற்குக் கருவூர்ச் சித்தரும் உதுமானி நாயனாரும் கொண்டிருந்த காரணங்களைக் குறித்த விவரங்கள். அவற்றின் நியாயங்களைப் பற்றிய விவரங்கள்.
உண்மையில் நான் திணறிக்கொண்டிருந்தேன். எனது கொள்ளளவின் எல்லை எனக்கு விரைவில் சுட்டிக்காட்டப்படும் என்று தோன்றியது. ஒரு புறம் திகட்டியது. ஒரு புறம் விசித்திரங்கள் மிகுந்த வேற்றுக் கிரகமொன்றில் உலா வருவது போன்ற மகிழ்ச்சியை அளித்தது.










Add Comment