84. அவனும் இவனும்
சில தருணங்கள் தம் இயல்பை மீறி அழகெய்தி விடுகின்றன. கடுங்கோடையில் எதிர்பாராது எப்போதேனும் வந்துவிடும் பெயலினைப் போல அவற்றின் உரு வேறாகி இரசிக்கச் செய்துவிடுகின்றன. வளி குளிர்ந்துவிடுகிறது. நிலம் குளிர்ந்துவிடுகிறது. மொட்டு வெளிப்படும்போதே பூத்துச் சிரிக்கும் அதிசயம் யாரும் காணாமல் அரங்கேறிவிடுகிறது. கட்டுக்கடங்காத பெருங்கூட்டத்தில் தனது மதலையைத் தொலைத்த தாய்க்கு, எங்கோ தொலைதூரத்தில் அதன் அழுகுரல் மட்டும் தனித்துக் கேட்டுவிடுவது போன்றதொரு தருணம். அதை என்னவென்று விவரிப்பேன்? எதைச் சொன்னாலும் போதாமையே நிறைந்திருக்கும். ஆனால் இப்பெருங்கதையில் நிகழவே வாய்ப்பில்லை என்று நான் எண்ணியிருந்த ஒரு கட்டம் தனது தரிப்பிடத்தினின்று மேலெழுந்து வந்து தோன்றித் துலங்க ஆரம்பித்தது. மனிதர்களைப் போல நான் உணர்ச்சி வயப்படலாகாது என்று மீண்டும் மீண்டும் எனக்குள் சொல்லிக்கொண்டாலும் அந்தத் தருணத்தில் என்னால் அது இயலாது போனது. நானறியாத என் உணர்ச்சிக்கு என்னைக் கொடுத்துவிட்டு, நடந்தேறவிருக்கும் இன்னொரு மகத்தான விசித்திரத்தைக் கண்டுணரத் துடித்துக்கொண்டிருந்தேன்.
ஒன்றும் விளங்கவில்லையல்லவா? எனக்குமே முதலில் அப்படித்தான் இருந்தது. நிசும்பசூதனியின் ஆலய வாசலில் வீரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட சார்வாகன், தேவையே இன்றி எதற்காக இங்கொரு சிக்கலுக்கு உட்படுகிறான் என்று எண்ணினேன். எதை எதிர்பார்த்து அவன் கோயிலுக்கு அத்தனை விரைவாக வந்து சேர நினைத்தான் என்று உண்மையில் எனக்கு விளங்கவில்லை. கோயிலைத் தகர்ப்பதுதான் தோன்றித் துலங்காத எதிரிகளின் திட்டமென்றால் அது அவனைக் கொண்டுதான் நடந்தேற வேண்டும். உதுமானி நாயனாரும் கருவூர்ச் சித்தரும் இதைத் தெள்ளத் தெளிவாக அவனுக்கு எடுத்துச் சொல்லியிருந்தார்கள்.
பார், நீ ஒரு கருவி. வெறும் கருவி மட்டுமே. உன் சிந்தைக்குள் யாரும் ஏறி அமர்ந்துகொள்ள முடியும். ஏதுமற்ற அவ்வெளியைத் தமது எண்ணங்களால் நிரப்பி, அதை உன் உடலத்தைக் கொண்டு, உன்னைச் செய்ய வைத்து நிறைவேற்றிக்கொள்ள முடியும். தஞ்சப்புரியில் உள்ள நிசும்பசூதனியின் ஆலயத்தைத் தகர்ப்பதென்பது அவர்களுக்கு ஒரு தொடக்கமாக மட்டுமே இருக்க முடியும். உன் மூலமாக அது நிறைவேறுமானால் அதன் தொடர்ச்சியாக நிகழவிருப்பவை எண்ணிப் பார்க்கவும் இயலாத கோர வடிவம் கொண்டவை.









Add Comment