60. உரியதும் அல்லதும்
அவனது புறத்தோற்றம்தான் இரும்பனை நிகர்த்ததாக இருந்ததே தவிர, சிந்தை ஒரு மதலையினுடையதைப் போலிருந்தது. சார்வாகனின் சிந்தை இப்படி இல்லை. தவமுனியாகப் பிறகு தெரிய வந்தவனின் சிந்தை இப்படி இல்லை. நான் புகுந்து மீண்ட உதுமானி நாயனாரின் சிந்தையுமேகூட பகுதியளவு பூடகம் பூசியதாகத்தான் இருந்தது. நீ ஒரு சிசு என்று சார்வாகன் மீண்டும் மீண்டும் பாரதாய தத்தனைக் குறிப்பிட்டான். ஆனால் தத்தனின் சிந்தைக்குள்ளும் ஒரு சிறிய சாகச நாட்டமும் கள்ளத்தனமும் இருந்ததை நானறிவேன். ஆனால் அவன் அதை வெளிப்படுத்தியதில்லை. சார்வாகனிடம்கூட. சார்வாகன் குறிப்பிட்ட பூரண வெளிப்படைத்தன்மை தனக்குக் கூடி வர வேண்டுமென்று அவன் விரும்பியது உண்மை. ஆயினும் தனது தாய் தந்தையரைப் பொறுத்த மட்டில் அவர்கள் துணுக்குறாத விதமாகவே இறுதிவரை இருந்துவிட முடியுமானால் நல்லதென்றே அவன் கருதினான்.
வேட்டன் எறிபத்தன் என்னும் அந்த விநோதங்கள் நிறைந்த மனிதன் உண்மையிலேயே முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்பவன்தானா என்பதைத் தேடித் தெளிவதே என் முதல் நோக்கமாக இருந்தது. அவனது சிந்தைக்குள் நான் எத்தனை காலத்தைக் கடைந்தெடுக்க வேண்டியிருக்குமோ என்று எண்ணியபடியேதான் அவனைக் கருதினேன்.
ஆனால் எனக்கு அதில் எந்த இடர்பாடும் இல்லை. சொன்னேனே, ஒரு மதலையின் சிந்தைக் கட்டினைப் போலவே அவனுடையது இருந்தது. ஆம். அவன் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத்தான் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு வாய்த்த மரணமிலாப் பெருவாழ்வு, கருவூர்ச் சித்தரின் வரமாக அளிக்கப்பட்டதென்பதை அவனுக்குள் புகுந்த சில நொடிகளிலேயே நான் தெரிந்துகொண்டேன்.











Add Comment