62. மீட்சி
ஒரு சகுந்தப் பறவையைப் போல அவன் யாருமற்ற வெளியில் தனித்து அலையத் தொடங்கினான். வாலிபப் பிராயத்தின் தலை வாயிலில் அவனது அணுக்கர்கள் துள்ளித் திரிந்துகொண்டிருந்தபோது அவனொரு நோக்கத்தை நெஞ்சில் ஏந்தி, அந்நோக்கமாக உருமாறிப் போனான். ஏடெழுதக் கற்றதும் இலக்கணம் அறிந்ததும் இன்னும் பல பாடங்களில் தேர்ச்சி கண்டதும் மதிப்புக்குரியவைதாம். ஆயினும் ஒரு சித்தரின் மாணாக்கனாக இருந்து இலக்கணம் பயின்றதே நிகரமென்று நிறைவு கொள்ள அவன் மனம் ஒப்பவில்லை.
நான் மூடனல்லன். நான் மூர்க்கனல்லன். நான் புலையனல்லன். சிவ சிந்தையற்றவனோ, இறுக மூடி அடைத்த பாழிக்குள் நிறைந்த இருளைப் பூசிய மனத்தைக் கொண்டவனோ அல்லன். ஒரு வித்தையைக் கொண்டு மனித குலத்தைக் காக்க இயலுமென்றால், அதைக் கற்றறிந்து நான் உதித்த குலத்தின் நலனுக்கு என்னாலானதைச் செய்ய விரும்புவதை என் குருநாதரால் விளங்கிக்கொள்ள இயலவில்லை என்பதை என்னால் நம்பவும் ஏற்கவும் முடியவில்லை.
நான் பயின்ற சாலையில்தான் அந்த இரு மாணாக்கர்களும் இருந்தார்கள், பயின்றார்கள். என் பிராயமேதான் அவர்களுக்கும். ஆயின் அவர்தம் பெயர்களைக் கூட நான் அறிந்ததில்லை. அவர்கள் என்னினும் அறிவிற் சிறந்தவர்களாக இருக்கலாம். என்னோடு பயின்ற பிற அனைத்து மாணாக்கர்களினும்கூடச் சிறந்தவர்களாக இருக்கலாம். அது குருநாதருக்குப் புலப்பட்டிருக்கக் கூடும். அதுவல்ல பிரச்னை. பாண்டமாகவா நான் அவரிடம் சென்றேன்? அவ்விருவரைப் போலவே வனையவல்ல மண்ணாக அல்லவா போய்ச் சேர்ந்தேன்?











Add Comment