67. மர்ம மனிதன்
ஓர் ஒடுங்கி தன் உறுப்புகளை உள்ளிழுத்துக்கொண்டது போல அவன் தன் மனத்துக்குள் சிறுத்துச் சுருங்கிப் போனான். ஆசை ஒரு தகுதியல்ல என்று சித்தர் குறிப்பிட்டது முற்றிலும் சரியாக இல்லாது போனாலும் தன்னைப் பொறுத்தவரை சரிதான் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு பெரும் மதியூகியாக அவன் திகழ்வான் என்று அவர் சொன்னதையோ, ஆளவே பிறந்தவன் என்று மயூரமுகி அறுதியிட்டதையோ என்றுமே தான் எண்ணிப் பார்த்ததில்லை என்பதை நினைவுகூர்ந்தான். தன்னையறிதல் என்பது இவையெல்லாம் அல்லாது வேறென்ன? தன்னைக் காட்டிலும் தன்னைக் குறித்துப் பிறர் அதிகம் அறிந்திருப்பதே அவனுக்கு நாணமளித்தது. மயூரமுகியைச் சந்திக்காது போயிருந்தால் வாழ்நாள் முழுவதும் புழுங்கியே மாண்டிருப்போம் என்று நினைத்தான். மறுநொடியே தான் மரணமற்றவன் என்பதை எண்ணிப் பார்த்துப் பரவசப்பட்டான். ஏன், எதனால் தனக்கு இதெல்லாம் வாய்த்ததென்பதை அறிவதொன்றே தன் அடுத்த கருமமென்று கருதினான்.
புறப்படும்போது மயூரமுகி அவனுக்கு நிறைய எச்சரிக்கைகள் விடுத்திருந்தாள். நடந்த எதையும் யாரிடமும் விவரிக்காதே. உன் பெற்றோரிடமும் எதையும் சொல்லாதே. கால் போன திக்கில் எங்கோ சென்றேன்; கால் வலி கண்டதும் திரும்பி வந்தேன் என்று சொல் என்று அவள் கூறியிருந்தாள். ஊர் சிரித்தால் பொருட்படுத்தாதே. இழித்துப் பேசினால் சிரித்து ஏற்றுக்கொள். கண்ணீர் விட்டுக் கதறும்படி ஆனாலும் உன் உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்தாதே. நான் யார் தெரியுமாவென அகந்தை கொள்ளாதே. தெரிந்துகொள் வேட்டனே, இக்கணம் நீ ஒன்றுமில்லாதவன். வெறும் மனிதனாக என்னிடம் வந்தாய். உன்னைக் கையேந்தி இரந்து நிற்கச் சொல்லி நான் திருப்பி அனுப்புகிறேன். நீ கேட்பது உன் கரத்தில் விழும்வரை நீ என்ற ஒன்று இல்லவேயில்லை எனக் கொள்.
சந்நதம் கொண்டவளைப் போலத்தான் அவள் சொல்லி அனுப்பியிருந்தாள்.









Add Comment