91. மாயப் பொதி
அவர்கள் மூவரது கட்டமைப்பை எண்ணும்தோறும் திகைப்பாகத்தான் இருக்கிறது. இதனைச் சிந்தித்ததும் வடிவமைத்ததும் வேட்டனா, மயூரமுகியா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மாபெரும் கலை விற்பன்னராகக் காலத்தில் நிலைத்திருக்க வேண்டிய ஒரு பிறவி, இப்படிக் கண்காணா இருள் வெளியில் அவர்களுக்கு மட்டுமே புலப்படக்கூடிய மாயச் சிறுஒளி ஒன்றனைத் தமது மானசீகத்தில் சீலையாக விரித்து உதறிப் பறக்கவிட்டு அதன் மினுக்கில் தென்படும் உருவற்ற இன்பத் தீவினை எட்டிப் பிடித்துவிடும் வேட்கையுடன் காலகாலமாக அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்களே என்று எண்ணாதிருக்க முடியவில்லை.
சார்வாகனும் மாயமுனியும் இம்மல்லனும் வேட்டனின் அம்சங்கள் என்பதில் மாற்றில்லை. ஆனால் மாயமுனிக்கும் மல்லனுக்கும் சார்வாகனைத் தெரியுமே அன்றி சார்வாகன் அவர்கள் இருவரையும் பெயரளவிலும் அறிய மாட்டான். அவன் அறிந்ததெல்லாம் தான் வேட்டன் எறிபத்தனின் அம்சம் என்பதை மட்டுமே. யார் அந்த வேட்டன்? தெரியாது. எது அவனது இலக்கு? தெரியாது. முந்நூறு ஆண்டுகளாக அவன் உயிரோடிருக்கிறான் என்று கருவூர்ச் சித்தர் சொல்கிறார். எங்கே, எப்படி, எதனால், யாருக்காக அல்லது எதற்காக என்று எதுவும் தெரியாது. அவன் சிந்திக்கிறான். அவனொரு மனிதன். ஆனால் அவனது சிந்தை இயக்கிச் செல்வது மல்லன் எனும் மாபெரும் காதலனை. இதைச் சார்வாகன் அறிய மாட்டான். அவன் எண்ணிக்கொண்டிருப்பதெல்லாம் தானொரு சார்வாகன். தன் சிந்தையில் உதிக்கும் கருத்துகளே தன் அதரம் வழியாக வெளிவருகின்றன. இல்லையப்பா, உனக்காக எங்கோ ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு மாயமுனியொருவன் சிந்திக்கிறான், அவனது சார்வாகக் கருத்துகளைத்தான் நீ பேசுகிறாய் என்று சொன்னால் அவனது சிரம் வெடித்துச் சிதறிவிடக் கூடும்.











Add Comment