96. எங்கே?
திட சித்தம் கொண்ட ஒரு யோகியினைப் போல என் கவனத்தை அவனது சிந்தைக்குள் நிலைநிறுத்தியிருந்தேன். ஒரு கூகையின் பார்வை நிகர்த்த கூர்மை அதில் இருந்ததை உறுதி செய்துகொண்டேன். இந்நொடி முதல் நான் இன்னொன்றைச் சிந்திக்கப் போவதில்லை. யாரையும் வேறெதையும் கருதப் போவதில்லை. நிகழ்ந்தவையும் நிகழவிருப்பவையும் எனக்குப் பொருட்டல்ல. தற்கணத்தின் தகிப்பொன்றே என் தியானப் பொருளென்று உறுதி செய்துகொண்டேன்.
அன்றைக்கு மிக நிச்சயமாக ஒரு பெரும் சம்பவம் நிகழ்ந்துவிடும் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது. இது இவ்வாறாகவே நடக்குமென்று ஊகித்த பின்னரே கருவூர்ச் சித்தர், சார்வாகனை மீண்டும் படித்துறைக்குச் செல்லப் பணித்தார் என்பதில் எனக்கு ஐயமில்லை. என் ஆர்வம் அதில் இல்லை. எல்லாம் எண்ணியபடி நிகழ்ந்துவிடுவதில் விசித்திரமேதுமில்லை. விசித்திரமல்லாத ஒன்று இப்பெருங்காதையின் எந்தப் பக்கத்திலும் இல்லை என்றறிவேன். அதனாலேயே என் கவனத்தின் முழுமையைச் சார்வாகனின் சித்தத்தினுள் குவித்துக் கிடந்தேன்.
இப்போது அவனது சிந்தை முற்று முழுதாக மல்லனால் ஆளப்பட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். சித்தரைச் சந்திப்பதற்கு முன்னர் அவன் என்னவாக இருந்தானோ, எவ்வாறெல்லாம் இயங்கினானோ, அதே வடிவம். அதே வெளிப்பாடு. தஞ்சப்புரியோ, அதன் மக்களோ, அவர்களது நம்பிக்கையோ, வேறெதுவோ அவனுக்குச் சிறிதும் பொருட்டாக இருக்கவில்லை. ஒரு கோயிலைத் தகர்ப்பதென்பது ஒரு குலமே முட்டி மோதி மடிந்து போகச் செய்வதன் தொடக்கப் புள்ளியாகிவிடுமென்ற அச்சமோ, கவலையோ, அக்கறையோ அவனுக்கு இல்லை. மாறாக, நிசும்பசூதனியின் ஆலயத்தை நிர்மூலமாக்குவதன் மூலம் விட்ட இடத்திலிருந்து தனது பணியை மீளத் தொடங்கியே தீர்வதென்ற வெறி அவனுக்குள் கனலெனத் திரண்டெழுந்து நின்றிருந்ததைக் கண்டேன்.











Add Comment