95. உருமாற்றம்
நொடிக்கு நொடி அவன் வியப்பளித்துக்கொண்டிருந்தான். ஒரு சாதாரண மனிதனின் புவியில் காலூன்றிய சிந்தை எந்த எல்லைவரை சிந்திக்குமோ, அதுவரையே அவன் சிந்தித்தான். அவனுக்குக் குழப்பங்கள் இருந்தன. அவன் தெளிந்தும் இருந்தான். அவன் திடமான சில கருத்துகளைக் கொண்டிருந்தான். நியாயமென வரும்போது அவற்றில் சிறிய மாற்றங்களைச் செய்துகொள்வதில் பிழையில்லை என்றும் நினைத்தான். மன்னர்கள், நாடுகள், எல்லைகள், ஆட்சி, அதிகாரம், மதம், சடங்குகள் அனைத்தையும் அவன் அறவே வெறுப்பவனாக இருந்தான். அவ்வெறுப்பின் நிறைக்குச் சற்றும் குன்றாத அளவுக்கு மனித குலத்தை அவன் நேசித்தான். தெய்வங்களை அவன் நிராகரித்தான். தெய்வங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு பிழைப்பு நடத்தும் அனைவரையும் அருவருப்புடன் நோக்குபவனாக இருந்தான். எதிர்பாராத வகையில் தெய்வம் நேரில் வந்து ஒரு நல்லதைச் செய்யக்கூடுமென்றால் எவருக்கும் சாயாத தன் தலை அதற்கு நிச்சயமாகவே சாயுமென்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இந்த எண்ணமேகூடக் கருவூர்ச் சித்தரின் தொடர்புக்குப் பிறகு தனக்கு உண்டானதென்பதையும் நினைவுகூர்ந்து ரசித்தான்.
ஓ, சித்தரே. உங்களுக்குச் சீடனாக வருகிறேன் என்று நான் சொன்னதற்கு வேறு பொருள் கற்பித்துக்கொண்டு விடாதீர். உம்மாலும் உமது சித்தாலும் சிவத்தாலும் எனக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை. பசித்த பொழுதில் இரண்டு கவளம் உணவிருந்தால் எனக்குப் போதும். அதுவும் இல்லாவிடில் கிழங்குகளையும் பழங்களையும் தின்று பசியாறிக் கொள்வேன். பட்டினியே கிடந்தாக வேண்டுமென்றாலும் எனக்கு அது பழகியதுதான். சிறு பிராயத்தில் எத்தனையோ கிழமைகள் ஒரு பிடி சோறுமின்றி, கேட்க நாதியற்று மயங்கிக் கிடந்திருக்கிறேன். இன்னும் நான் மரித்துவிடவில்லை என்பதை விழிப்புடன் எண்ணிக்கொள்கிறேன்.
வாய்விட்டே அவன் இதனைச் சொன்னபோது இத்தனை காலமாக அவன் தனது சிறு பிராய நினைவுகளை எங்கே வைத்திருந்தான் என்கிற வினா ஒன்றே எனக்கு இருந்தது. அதையும் கண்டறியாமல் என் பணி நிறைவுறாதென எண்ணிக் கொண்டேன்.
















Add Comment