99. அறியாதவை
தன்னைத் தவிர இன்னொன்று பெரிதல்ல என்றே அவன் நினைத்தான். ஆனால் நானறிந்து தன்னைக் குறித்து அவன் சிந்தித்ததில்லை. நீயறியாமல் உனக்குள் இவை நிகழ்கின்றன என்று உதுமானி நாயனாரும் கருவூர்ச் சித்தரும் எடுத்துச் சொன்ன பின்பும்கூட ஒரு மதலையின் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டானே தவிர, அதையும் எதையும் குறித்து அவன் தீவிரம் கொண்டு சிந்தித்து நானறிந்ததில்லை. முதல் முறையாக அவன் அதனைச் செய்தான்.
சித்தர் என்னைப் படித்துறைக்குச் செல்லச் சொன்னார். ஏனென்று கேட்டு, விடையில்லாத போதும் கொடுத்த வாக்கினைக் கருதி அவர் சொன்னதைச் செய்தேன். ஆனால் எனக்கு நிச்சயமாகத் தெரியும். படித்துறைக்குத்தான் போகச் சொன்னாரே தவிர, கோயிலுக்கு நடந்து வரச் சொல்லவில்லை. அவர் சொல்லாத ஒன்றைச் செய்திருக்கவே மாட்டேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அவர் சொல்லாத ஒன்றைச் செய்கிறோம் என்கிற எண்ணம்கூட இல்லாமலா இத்தனை தொலைவைக் கடந்து வந்திருப்பேன்? விஜயம் மென்று பல கிழமைகளாகிவிட்டன. அதன் நினைவே இல்லாது போய்விடும் போல இருக்கிறது. ஒரு பானைக் கள்கூட அருந்தவில்லை. லாகிரியின் பிடியில் இருந்திருந்தாலாவது, என்னையறியாமல் செய்திருப்பேன் என்று எண்ணிக்கொள்ள வழியுண்டு. அதுவுமில்லாமல் எப்படி இப்படி நேர்ந்தது?
ஒரு சாதாரண மனிதனைப் போல அவன் சிந்தித்ததைப் படிக்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
சொல், சார்வாகனே. குருநாதர் உன்னை இங்கு வரச் சொன்னாரா?
என்று உதுமானி நாயனார் மீண்டும் கேட்டார்.











Add Comment