ஒபாமா 2009ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீர்திருத்தும் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுத உற்பத்தியைக் குறைக்கும் பணிகளுக்காகவும் இந்தப் பரிசு வழங்கப்பட்டது. ஈரானுடனான புதிய அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ரஷ்யாவுடனான நட்பு முயற்சிகளும் இதற்குக் காரணங்களாகக் கருதப்பட்டன. இந்தப் பரிசு பாராட்டையும் சர்ச்சையையும் ஒரே நேரத்தில் கொண்டு வந்தது. சில விமர்சகர்கள் இது மிக விரைவில் வழங்கப்பட்ட பரிசு என்று கருதினர்.
ஹைத்தியில் 2010ஆம் ஆண்டு கோரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பேரழிவில் 306,000 பேர் உயிரிழந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அமெரிக்கா உடனடியாக உதவி நடவடிக்கைகளைத் தொடங்கியது. ராணுவம், ரெட் கிராஸ் அமைப்பு மற்றும் கடற்படை வீரர்களை உதவிக்கு அனுப்பியது. ஒபாமா நிவாரண நடவடிக்கைகளை அறிவித்தார். உணவுப் பொருள்கள், மருத்துவ வசதிகள் அனுப்பிவைக்கப்பட்டன. கூடவே 100 மில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இது அமெரிக்காவின் மனிதாபிமான முகத்தை உலகிற்குக் காட்டியது.
அமெரிக்காவில் உடல்நலக் காப்பீடுகள் எப்போதுமே பிரச்சினைகள் நிறைந்ததாக இருந்தன. ஏழைகளுக்கும், பல உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கும் காப்பீடு எட்டாக்கனியாக இருந்தது. நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஒரு சலுகையாக மருத்துவக் காப்பீடுகள் அளிக்கப்படும். அப்போது பணியாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே உபாதைகள் இருந்தாலும் காப்பீடுகள் மறுக்கப்படுவதில்லை. ஆனால் உபாதைகளுக்கு ஏற்ப கட்டணம் அதிகமாக இருக்கும். தனிநபராகக் காப்பீடு வாங்க விரும்பினால் அவை பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டுவிடும். ஒபாமா அறிவித்த புதிய திட்டத்தில், காப்பீடுகளுக்கு விண்ணப்பிக்கும் யாரையும், எந்தக் காரணத்தையும் கூறி நிராகரிக்க முடியாது.















Add Comment