21-ஜூன்-2025.
ஏல் தாம்போ,
மீக்கை பள்ளத்தாக்கு,
கொலம்பியா.
ஒரு ராணுவ ஹெலிகாப்டர் மீக்கை பள்ளத்தாக்கிலிருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. திடீரென்று அப்பகுதி மக்கள் நூறு பேர் சேர்ந்து ஹெலிகாப்டர் மேலெழும்ப முடியாதபடிச் சுற்றி வளைத்தார்கள். உள்ளே விலங்குடன் அமர்ந்திருந்த எஸ்டாடோ மேயர் சென்ட்ரல் (EMC) கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினரை விடுதலை செய்தார்கள். அங்கிருந்து அவரைக் கைது செய்து கொண்டு செல்லவிருந்த பன்னிரண்டு ராணுவ வீரர்களைக் கடத்திச் சென்றார்கள். அடுத்த நாள் இவர்களை மீட்க வந்த நாற்பத்தைந்து ராணுவ வீரர்களையும் இருநூறு பேர் சுற்றிவளைத்து கடத்திச் சென்றார்கள். மொத்தம் ஐம்பத்தேழு ராணுவ வீரர்கள் இப்போது பொது மக்களின் பிடியில் இருக்கிறார்கள்.
மலை வளம் மிகுந்த தென்மேற்கு கொலம்பியாவின் நூற்றுக் கணக்கான பள்ளத்தாக்குகளுள் ஒன்று ஏல் தாம்போ. அது ஒரு நகராட்சியும்கூட. பசுமையாக அங்கு காணப்படுபவை யாவும் கொகெய்ன் பயிர்களே. அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரம் இந்த போதைப்பொருளை வளர்த்து ஏற்றுமதி செய்வதே. பயிரிடுவது. பறிப்பது. பார்சல் கட்டுவது. துறைமுகங்களுக்கு அனுப்பிவைப்பது.அவ்வளவுதான் அவர்கள் அறிந்தவை. அதன்பிறகு கடல்வழி உலக நாடுகளின் போதைச் சந்தையில் கொலம்பிய கொக்கைன் சேர்ந்துவிடும். இப்பகுதியில் ராணுவம் இருப்பது எப்போதுமே இவர்களுக்கு இடையூறுதான். ஆனால் கடத்தலுக்கு இது ஒரு காரணம் மட்டுமே. இவர்களைப் பயமுறுத்தித் தன் பிடியில் வைத்திருக்கும் EMC கிளர்ச்சிக் குழுவின் கட்டளைப்படியே இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இது நடப்பது முதல் முறையல்ல. நமது வட கிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் தீவிரவாதிகள் அவ்வப்போது ராணுவ வீரர்களைக் கொன்று போடுவதைப் போல கொலம்பியாவிலும் இது அடிக்கடி நடக்கும் சம்பவம். இரண்டு மாதங்களுக்கு முன்னால் இருபத்தேழு வீரர்களைக் கொன்று குவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு முன்னால் இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கிடையே நடந்த தாக்குதலில் பொது மக்கள் நூற்றுக்கணக்கில் இறந்தார்கள். இதற்குப் பயந்தே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பகுதியிலிருந்து தப்பித்துச் சென்று விட்டார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஐந்தாயிரம் ராணுவ வீரர்களை இப்பகுதிக்கு அனுப்பியது அரசாங்கம். கிளர்ச்சியாளர்களின் முக்கியத் தலைவர்களைத் திட்டமிட்டு கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் யார் யாரைக் கைது செய்கிறார்கள் என்பது சமயத்திற்கேற்ப முடிவாகிறது.















Add Comment