25. ஐஎஸ்ஐஎஸ்: கொடூர நிழல்
அதுவரை வெளிப்படையாக சிரியாவுக்குள் நுழையாமல் இருந்தது அமெரிக்கா. வேதியியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி அசாத் மக்களைக் கொன்று குவித்தபோதும் தாக்குதல் தொடுக்கவில்லை.
ஏனெனில் அப்படித் தடுப்பதனால் அமெரிக்காவுக்குப் பெரிய லாபமோ நஷ்டமோ இருக்கவில்லை. அசாத்தின் கை உயர்ந்தாலும், சிரியாவைத் தாண்டி இருக்கும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது. எனவே அமெரிக்க காங்கிரஸும் சிரியாவின் மீதான ஒபாமாவின் தாக்குதல் யோசனைகளுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
ஆனால் ஐ.எஸ் வந்த பிறகு காட்சிகள் மாறின. வரிசையாக அமெரிக்கர்களைக் கொன்றது ஐ.எஸ். அவர்களைக் கழுத்தறுக்கும் காணொளிகளையும் இணையத்தில் பதிவேற்றியது. இது அமெரிக்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஐ.எஸ் முதலில் இராக்கைப் பிடித்தார்கள். இப்போது சிரியா. மிக விரைவிலேயே தங்கள் பகுதிகளுக்குள் அவர்கள் நுழையலாம் என ஜோர்டான், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அமெரிக்க ஆதரவு அரசுகள் பயந்தன. ஒருவேளை இந்த நாடுகளுக்குள் ஐ.எஸ் நுழைந்தால் மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். எனவே ஐ.எஸ் படைகள் அழிக்கப்பட்டாக வேண்டும்.










Add Comment