57. கவித்துவக் குரூரம்
துலங்காதவரையே எது ஒன்றும் வியப்புணர்வைத் தக்க வைக்கும். துலங்கிய விநாடி அவ்வியப்புணர்வு உச்சமடையும். பிறகு அனைத்தும் பனியென மாயமாகிப் பாதங்கள் நிலம் தேடத் தொடங்கும். எனக்கு உடல் இல்லை. உறுப்புகள் இல்லை. பெயர் உள்ளிட்ட அடையாளமேதுமில்லை. நான் யாரென்று நானே சொல்லி நீங்கள் அறிந்தவை தவிர, என்னைக் குறித்து யாரும் வேறெதுவும் அறிய வாய்ப்பில்லை. இதையும் நானே சொல்கிறேன், என் வியப்புணர்வு தணியத் தொடங்கியிருந்தது. அது அவன்தான். இன்னொருவனல்லன். அவனைப் போன்ற வேறொருவனல்லன். அவனது உருவை இரவல் பெற்றோ, களவாடியோ களமாட நினைக்கும் யாரோ அல்ல. அவன் என்பது அவன் மட்டும்தான்.
இது புலப்பட்ட நொடியில் இன்னொன்றையும் கண்டடைந்தேன். நானறியாத மாயாவி ஒருவன் அவனுக்குள் வந்து செல்வதையும் அவனுக்கு மயூரமுகி என்னும் தோழி உள்ளதையும் மாந்திரிகம் பயிலும் மாணவர்கள் இருப்பதையும் சொன்னேன். இல்லை. அதுவும் அவனேதான். அல்லாத பட்சத்தில் வேறொருவன் அவனது உடலத்தினுள் நுழைந்து மீள்வதை என்னால் உணர இயலாமல் ஆகியிருக்க வாய்ப்பே இல்லை.
இதோ இங்கே, மனிதர்களோ மிருகங்களோ உலவ வாய்ப்பில்லாத இச்செஞ்சிகரத்தின் மீது என்னைக் கருதித் தவமிருக்கும் இம்மானிடனை இரண்டாக, மூன்றாக, நான்காக அல்ல; பல நூற்றுக் கணக்கான துகள்களாகப் பகுத்தாலும் அவனது செயல்களும் சிந்தனையும் வேறுபடுமே அன்றித் தோற்றம் மாறப் போவதில்லை. அது எனக்குத் தெரிந்துவிட்டது. இயற்கையின் கவித்துவக் குரூரம் மேலோங்கித் ததும்பும் விதமான அப்படியொரு பிறப்பு எப்படிச் சாத்தியம் என்று ஆராய்ச்சி புரிவது பயனற்றது. அது விடை காண இயலாததாக இருக்கக் கூடும். ஆனால் அக்கணம் நான் பெற்ற தெளிவு எனக்குப் போதுமானதாக இருந்தது.










Add Comment