2019 ஆகஸ்ட் 5 அன்று ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லடாக் தனி யூனியன் பிரதேசமாக உருவெடுத்தது. தொடக்கத்தில் இம்மாற்றத்தைப் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்ற போதிலும், காலப்போக்கில் லடாக்கின் பிரத்தியேக அடையாளம், நில உரிமைகள் மற்றும் தன்னாட்சி அதிகாரத்தைப் பாதுகாப்பது குறித்த கவலைகளால் போராட்டங்கள் வெடித்தன.
இந்தச் சூழலில், லடாக்கில் புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்க லடாக்கின் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இது லடாக்கின் மாநில அந்தஸ்து கோரிக்கையைத் திசைதிருப்பும் நோக்கத்தில் செய்யப்படுவதாக ஒருதரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அதேவேளையில், இந்த நிர்வாக ரீதியான ஏற்பாடு, சட்டமன்றத்தை அமைப்பதற்கான முதல்படி என இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர்.
இமயமலையின் உச்சாணிக் கிளையில் வீற்றிருக்கும் லடாக், பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுடனும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. இதனால் இந்தப் பகுதி இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.















Add Comment