உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடந்துகொண்டிருக்கும் மகா கும்ப மேளாவுக்குத் தமது குழுவினருடன் சென்றிருக்கும் சுவாமி ஓம்கார், அங்கிருந்து மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வழங்கும் நேரடி ரிப்போர்ட் இது.
மனித குல வரலாற்றில் எங்கும் எக்காலத்திலும் இதற்கு நிகரான இன்னொரு ஒன்றுகூடல் நிகழ்ந்ததில்லை. ஜனவரி 13ஆம் தேதி பிரயாக்ராஜில் மகா கும்ப மேளா தொடங்கியது. பிப்ரவரி 24 வரை இது நடக்கிறது. வந்தவர்களும் வருபவர்களும் வரப் போகிறவர்களுமாக மொத்தம் 40 கோடி மனிதர்களைக் கணக்கிடுகிறார்கள். என்றால், சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு கோடிப் பேர்.
உலக வரலாற்றில் நிலத்தை ஆக்கிரமிக்க, பழி தீர்க்க, மத வேறுபாட்டால் அடித்துக்கொள்வதற்கெனப் பல போர்களில் மக்கள் லட்சக்கணக்கில் கூடி இருக்கிறார்கள். ஆனால் எந்த ஒரு பிணக்கும் இல்லாமல் ஆன்ம நோக்கில் கோடான கோடி மனிதர்கள் கூடும் ஒரு நிகழ்வு என்றால் இதுதான்.
ஒரு தத்துவத்தால் பிணைக்கப்பட்ட மனிதர்கள் ஒன்று சேர்கிறார்களா என்றால் இல்லை. இந்து மதக் கூட்டம் என இதைச் சுருக்கி விடவும் முடியாது. சைவ வைணவர்கள் தொடங்கி, ஜைனர்கள் சீக்கியர்கள் சூஃபிக்கள் எனப் பல்லாயிரம் பிரிவினர்கள் ஒன்று இணைகிறார்கள்.
கடவுள், சித்தாந்தம் மற்றும் தத்துவம் எனப் பல்வேறு விதங்களில் வேறுபட்டு இருந்தாலும் இவர்களுக்குள் தர்க்கங்கள் பூசல்கள் இல்லை. யார் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் என்ற போட்டி பொறாமை இல்லை. அனைத்துமே அமைதியாக நிகழ்கின்றன. விவரிக்க இயலாத ஆன்ம ஒருங்கிணைப்பு.















Add Comment