போதைப் பொருள் கடத்தலுக்குப் பெயர் போன மெக்சிகோ கார்டல்கள், இப்போது எரிபொருள் கடத்தலிலும் ஈடுபடுகிறது என்கிற செய்தி வெளிவந்துள்ளது. அதுவும் தனியாக இல்லை, ஒட்டிப் பிறந்த உடன்பிறப்பு போல உள்ள அமெரிக்காவின் உதவியுடன் இந்தக் கள்ளக் கடத்தல் நடந்து வருகிறது.
மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் உள்ள சிறிய கடலோர நகரம் என்செனடா. பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள இந்த இடத்தில் ஒரு துறைமுகம் உள்ளது. என்செனடா துறைமுகத்தில் சரக்கு கப்பல்கள் (Container Ships), பயணிகள் கப்பல்கள் போன்றவை தாராளமாக வரலாம். எரிபொருள் கப்பல்களான டேங்கர் வகைக் கப்பல்கள் வந்து நின்றாலும், எரிபொருளைப் பாதுகாப்பாக ஏற்றி இறக்கும் வசதி இந்தத் துறைமுகத்தில் இல்லை. அதனால் இங்கே டேங்கர் கப்பல்களுக்கு அனுமதி கிடையாது.
அப்படியிருந்தும், சில மாதங்களுக்கு முன்னர் டென்மார்க் கொடியேற்றிய டோர்ம் அக்னஸ் என்ற பெட்ரோலிய டேங்கர் கப்பல் என்செனடா துறைமுகத்துக்கு இரவு நேரம் வந்து சேர்ந்தது. உள்ளே 1,20,000 பேரல் (barrel) டீசலுடன் வந்து சேர்ந்ததுதான் இதில் செய்தி. இது ஓர் அரிய செய்தி என்பதால், முக்கியமான பத்திரிகைகள் இதைக் கவனித்து விட்டன. ஆனால் இதை உண்மையில் கவனிக்க வேண்டிய அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். கப்பலின் வருகைக்காகக் காத்திருந்த ஒரு கும்பல், டீசலை லாரியில் மாற்றும் வேலையை அதிவேகமாகச் செய்தனர். லட்சக்கணக்கான லிட்டர் டீசலை ஏற்றிய லாரிகள் இரவு முழுவதும் சென்றன. லாரியில் டீசலை எடுத்துச் சென்றது ஒரு கார்டெல் கும்பல் என்றால், டீசலை எடுத்து வந்தது அமெரிக்க நிறுவனமான இகோன் மிட்ஸ்ட்ரீம் (Ikon Midstream).















Add Comment