6. வெல்லப்படாத ரகசியம்
நெல்லாகொரலியின் உச்சியிலிருந்து நஞ்சன் வீழ்ந்த பின்னர், அதற்குப் பின் மலையேற்ற முயற்சியைக் கைவிட்டு மலையிறங்கி வந்தனர் விஷ்ஷும் கிண்டர்ஸ்லியும்.
‘சமவெளிக்குத் திரும்புவது என்று தீர்மானித்தபோதுதான் இந்த நிலத்தைப் பிரிவதைப் பற்றி ஏக்கமாக உணர்ந்தோம். மலையின் அழைப்பு இன்னும் எங்களுடனே இருப்பதாகவே உணர்ந்தோம். இன்னும் சில நாள்கள் திட்டமிட்டு வந்திருக்கலாமோ என்று யோசித்தோம். எங்களையே சபித்துக்கொண்டோம். மலையில் வீழ்ந்து இறந்த நஞ்சன் எனும் சிறுவனை நினைத்துப் பயந்தோம். ஒருவேளை கிராமவாசிகள் சொல்வது போல, மலையேறி வருவதைத் தெய்வங்கள் விரும்பவில்லையோ என்று விவாதித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழம்பினோம். கலவையான உணர்வுகளோடு கீழிறங்கினோம்.
வொட்டகமண்ட் என்று இந்தக் கிராமவாசிகள் அழைக்கிற அந்த உச்சிச் சமவெளி இங்கிருந்து வெகுதொலைவில் கானகங்களுக்கு நடுவே காத்திருக்கிறது. ஆனால் நேரமில்லை. மனமில்லை. கூலிகள், வழிகாட்டிகள் எங்களுக்கு எதிராக மாறிவிட்டார்கள். நஞ்சனின் மரணத்திற்குப் பிறகு எங்களுக்கும் வேறு வழிதெரியவில்லை. எங்கள் சேமிப்பிலிருக்கும் உணவுகளின் அளவும் குறைந்துபோயின. மலையிறங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.















Add Comment