79 வீம்பு
விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் யோசிக்காமல் எதிர்ப்பவன் முறைத்துக்கொள்பவன் என்கிற வீர பிம்பத்துடன் இருப்பது பிடித்திருந்ததால் அப்படி இருந்தானா அல்லது ‘அடிச்சி வளக்கற கொழந்தை, யார் பேச்சும் கேக்காத மொரடாகிடும்’ என்று அவனுடைய அம்மா அடிக்கடி சொல்வதைப் போல, அப்பாவால் அது அவனுடைய இயல்பாக ஆகிவிட்டிருந்ததா என்று அவ்வளவு சுலபத்தில் சொல்லிவிடமுடியாது.
தன்னைப் புறக்கணிப்பவர்களையும் அவமதிப்பவர்களையும் ‘அவன் என்ன பெரிய மயிரா’ என்று துச்சமாக எண்ணி அடுத்த நொடியே அவர்களை மனதிலிருந்து தூக்கி எறிந்துவிடுவது சிறுவயது முதலே அவனுக்கு எளிதாக வந்துவிட்டிருந்தது. அவர்கள் ஏன் அப்படியொன்றும் முக்கியமில்லை என்பதை அவன் மனம் தர்க்க ரீதியாக அலசி ஆதாரங்களைத் திரட்டி அடுக்கிக்கொண்டது. அடுத்து, பார்க்கிற இடத்திலெல்லாம் சம்பந்தத்தை வலிந்து ஏற்படுத்திக்கொண்டு பேச்சுவாக்கில் வந்ததைப்போல சம்பந்தப்பட்டவர்கள் தலையை உருட்டிக்கொண்டிருந்தான். தன் அனுமானமும் அலசல்களும் சரிதான் என்பதை அடுத்தவர்கள் ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அவன் மனம் எதிர்பார்த்தது. அவர்களுக்கென்ன, ‘நமக்கென்ன போயிற்று’ யாரைப் பற்றியோதானே சொல்கிறான் என்று பெரும்பாலோர் அவன் சொல்பவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள். அது அவனுக்கு, தான் சரியாகத்தான் இருக்கிறோம் என்கிற எண்ணத்தை உண்டாக்கி அதீத தைரியத்தைக் கொடுக்க ஆரம்பித்தது. ஆனால், இவன் நம்மைப் பற்றியும் இப்படித்தானே பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பான் என்கிற ஐயத்தை கேட்பவர்களுக்குள் விதைக்கும்; ஆகவே அவர்கள் உண்மையான் அபிப்ராயத்தைச் சொல்லாமல், இவன் வாயில் ஏன் விழுந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற அச்சத்திலோ அல்லது எச்சரிக்கையுணர்விலோதான் எதிர்க் கருத்தைக் கூறாமல் தலையாட்டி வைக்கிறார்கள் என்கிற போதமின்றி நாம் சரியாகத்தான் இருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக்கொண்டான்.
அவன் அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்த ஜெயகாந்தனே அப்படித்தான் ஒன்வே டிராஃபிக்காக இருந்தார். சுந்தர ராமசாமி போன்ற மிகச்சிலரைத் தவிர, பெரிய இலக்கியவாதிகள் உட்பட எல்லோரையும் எகத்தாளமாகப் பேசி நையாண்டி செய்து சிரிப்பவராக க்ரியா திலீப்குமார் இருந்ததும் வேறு அவனுக்கு உத்வேகமளிக்கிற முன்மாதிரியாக அமைந்துவிட்டது.















Add Comment