கர்நாடகாவின் தெற்குப் பகுதி கிராமங்களிலும், கேரளாவின் எல்லையோரக் கிராமப்புறங்களிலும் பூதகோலா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமான இந்த நிகழ்ச்சிக்குப் பல நூற்றாண்டுப் பின்னணி உள்ளது. மேலோட்டமாக பார்க்கும்போது பூதகோலா ஒரு வழிபாட்டு நிகழ்வு எனத் தோன்றினாலும், இதனுள் நடனம், இசை, பரவசம், ஆனந்தம், பக்தி என மனித மனத்திற்கு உகந்த எல்லாக் கூறுகளும் இருப்பதால், இதனை ஒரு கலைவடிவம் என்றும் கூறலாம்.
பூதம் என்பது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களான இயற்கையைக் குறிப்பது. கோலா எனும் சொல்லுக்கு நிகழ்ச்சி அல்லது ஆட்டம் என்று பொருள். பூதகோலா என்பது இயற்கையை ஆட்டவடிவில் வழிபடும் நிகழ்ச்சி.
இந்த வார்த்தைக்கு இன்னொரு சுவாரசியமான பொருளும் நடைமுறையில் உள்ளது. நமது கிராமப்புறங்களில் பூசாரிகள் அருள் வந்து வாக்கு சொல்வார்களே அதுபோல, பூதகோலா நிகழ்ச்சியில் வேடம் அணிந்து ஆடுபவர் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குக் கடவுளின் பெயரால் தீர்வுகள் சொல்வதுண்டு. அவ்வாறு தீர்வு தருபவர்கள் மீது சம்பந்தப்பட்ட கடவுள் அல்லது முன்னோர்களின் ஆவி வந்து இறங்குவதாக அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். பூத என்னும் கன்னட வார்த்தைக்கு ஆவி என்றும் பொருள் உள்ளதால், ஆவிகளை வழிபட்டு நடத்தப்படும் நிகழ்ச்சி என்றும் பூதகோலாவை சொல்வதுண்டு.















Add Comment