செயலி மூலமாக உள்ளூர் ஆட்டோ, டாக்சி பயணங்களை ஒரே சொடுக்கில் பதிவு செய்யும் வசதியை 2009ஆம் ஆண்டு கொண்டு வந்து புரட்சி செய்தது ஊபர். இதையே இந்தியாவில் அடுத்த ஆண்டில் செய்தது ஓலா. ஊபரின் வேகத்தையையும் சக்தியையும் பார்த்த பல நிபுணர்களும் அடுத்த சில ஆண்டுகளில் உலகளவில் மக்கள் சொந்தமாக வாகனங்களை வைத்திருக்கவே மாட்டார்கள்; எல்லாப் பயணங்களும் ஊபர், ஓலா மூலமாகவே இருக்கும் என்று ஆருடம் சொன்னார்கள். ஆனால், இந்தளவு பெரிதாக இருந்தவர்களைப் பின்னுக்குத் தள்ளி, கதையையே மாற்றி எழுதிய செயலி ராபிடோ (Rapido).
2014ஆம் ஆண்டு மூன்று நண்பர்கள், பெங்களூரில் தி-கேரியர் (The Karrier) என்கிற வெளியூர் சரக்கு போக்குவரத்துக்கான இணையச் சந்தையைத் தொடங்கினார்கள். முதலாமவர் அரவிந்த் சங்கா (Aravind Sanka), இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), கரக்பூரில் இயந்திரவியல் படித்தார். பின்னர் ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். அடுத்தவர் பவன் குந்துபள்ளி (Pavan Guntupalli), இவரும் ஐஐடி மாணவர். ஐஐடி புவனேஸ்வரில் இவர் படித்தது மின்னணுப் பொறியியல். சாம்சங் நிறுவனத்தில் ஓர் ஆண்டு மென்பொருள் உருவாக்குநராகப் பணிபுரிந்தார். மூன்றாவது நிறுவனர் ரிஷிகேஷ் எஸ்.ஆர். (Rishikesh S R). இவர் பெங்களூரு பி.இ.எஸ் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் படித்தவர். பின்பு இணையத்தில் பணப்பட்டுவாடா செய்யும் துளிர் தொழிலை முயன்று பார்த்தார், அது வெற்றியடையவில்லை.
இந்த மூவரும் இணைந்து இந்தியாவில் நிலவும் சரக்குப் போக்குவரத்துப் பிரச்சனையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்துத் தொடங்கியதே தி-கேரியர். தங்களின் சொந்தப் பணத்தில் ஆரம்பித்த தி-கேரியர் நிறுவனத்தில், முதல் ஆண்டிலேயே 300க்கும் மேற்பட்ட சரக்கு லாரி ஓட்டுநர்கள் இணைத்தாலும் செயலி பெரியதாகப் பேசப்படவில்லை. இதைப் பார்த்துத் துவண்டுவிடாமல், அடுத்து என்ன என்று யோசித்தார்கள். ‘பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலில் சுலபமாக வளைந்து புகுந்து செல்ல வசதியானவை இரண்டு சக்கர வாகனங்களே. ஏன் அவற்றையே நாம் வாடகை வண்டிகளாக வழங்கக் கூடாது?’ என்று சிந்தித்தார்கள்.















Add Comment