தெலங்கானாவில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒரே வாரத்தில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டுள்ளன. சமீபத்தில் நடந்த கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாய்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக காமரெட்டி மாவட்டத்தில் ஐந்து ஊராட்சித் தலைவர்கள் உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் ஏற்கெனவே அந்தப் பகுதிகளில் நடந்துள்ளன. ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷ்யாம்பேட், அரேபள்ளி கிராமங்களில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களைக் கொன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண் ஊராட்சித் தலைவர்கள், அவர்களது கணவர்கள் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்போது முன்பைவிட அதிகமான நாய்கள் கொல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
‘பதினைந்து நாள்களுக்கு முன்பு எங்கள் பல்வஞ்சா கிராமத்தில் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டன’ என்று ஒரு கிராமவாசி கூறினார். ‘எங்கள் கிராமத்தில் பலரை நாய்கள் கடித்துள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்துகின்றன. அதனால் ஏற்பட்ட விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். இது பெரும் பிரச்சினையாக இருந்ததால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் நாய்களைக் கொல்ல உத்தரவிட்டனர்.’ என்றும் கூறினார்.















Add Comment