131. நிறைத்த பொருள்
எனக்கு நிச்சயமாகத் தெரியும். சார்வாகன் தவத்தைத் தொடங்கும்போது அவர்கள் யாரும் அங்கே இல்லை. உதுமானி நாயனாரும் அவரது மாணாக்கர்களும் எப்போது, எப்படி அங்கே வந்து சேர்ந்திருப்பார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. நீ இங்கிருப்பது யாருக்கும் புலப்படாது; யாரும் உன்னை நெருங்கி வர மாட்டார்களென்று சொல்லிவிட்டுக் கருவூர்ச் சித்தர் புறப்பட்டுச் சென்ற பின்பு உண்மையிலேயே அக்கடம்ப மரமும் அதனடியில் அமர்ந்திருந்த சார்வாகனும் உலகத்தார் பார்வையிலிருந்து முற்றிலும் மறைந்து போய்விட்டதை அறிவேன். இடையில் ஒருமுறை மயூரமுகி வேரகத்துக்கு வந்து அவனைத் தேடிச் சென்றபோதும் சார்வாகனின் மூச்சுக் காற்று வெளிப்படும் சத்தத்தைத்தான் கேட்டதாகச் சொன்னாளே தவிர, அவனைக் காணவில்லை. அக்கடம்ப மரமும் அவளுக்கு மறைக்கப்பட்டிருந்தது. தனது உட்புலனைக் கொண்டு வேட்டன் அம்மரத்தைப் பார்த்தான். அதனடியில் அமர்ந்திருந்த சார்வாகன் அவனுக்குத் தென்பட்டிருக்கிறான். மற்றும்படி வேரகத்துவாசிகள் யாரொருவர் பார்வையிலும் அம்மரமோ, அவனோ தென்படவேயில்லை. யார் யாரோ வழியோடு போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்ததைக் கண்டேன். உதுமானி நாயனாரோ, அவரது மாணாக்கர்களோ அவ்விடம் வந்து சேர்ந்ததை மட்டும் எப்படியோ தவறவிட்டிருக்கிறேன்.











Add Comment