146. அழிவுப் பேருரு
அவன் படுத்திருந்தான். ஆனால் உறங்கவில்லை. இந்நாள்களில் எப்போதும் எதையேனும் சிந்தித்துக்கொண்டே இருக்கும் வழக்கத்தில் இருந்தவன், அன்றைக்கு அதையும் செய்யவில்லை. எனக்கு அது சிறிது வினோதமாகத்தான் இருந்தது. நெடுங்காலத்துக்குப் பிறகு சார்வாகன் சிந்திக்காதிருப்பதை அவனது சிந்தைக்குள் இருந்தவண்ணம் கவனித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவனது சிந்தை அப்போது அவன் வசத்தில்தான் இருந்தது. அது இருக்கிறது என்பதை மட்டும் அவ்வப்போது உறுதி செய்துகொண்டதையும் கவனித்தேன். எதையுமே எண்ணாமல் சட்டென்று சுருண்டெழுந்து தனது குடிசையை விட்டு வெளியே வந்தான்.
அன்றைக்கு மகாலய அமாவாசை நாள். மூன்றாம் யாமம் முடியவிருந்த நேரம். வெளியில் சிறிதும் ஒளியற்றிருந்தது. சார்வாகன் அதையெல்லாம் கருதவேயில்லை. தன் குடிசைக்கு அருகே போடப்பட்டிருந்த குடிசைகளுள் ஒன்றனை நெருங்கி நேரே உள்ளே சென்றான். அங்கே பாரதாய தத்தனும் இன்னும் இரண்டு பேரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். சார்வாகன் சில நொடிகள் தாமதித்து, உறங்குவோரில் தத்தன் யாரெனத் தேடிக் கண்டான். பிறகு குனிந்து அவனைத் தட்டினான்.
அவன் கண் விழித்தபோதே வாயைப் பொத்தி, எழுந்திரு என்று தோளில் தட்டிச் சைகை செய்து, வெளியே அழைத்துக்கொண்டு வந்தான்.
ஐயனே, உறக்கம் வரவில்லையா என்று தத்தன் கேட்டான்.











Add Comment